கண்டி திகன பள்ளிவாயலில் எரிக்கப்பட்ட குர்ஆன் பிரதியின் எஞ்சிய பக்கத்தில் உள்ள வசனம்.
என்று ஆச்சரியக்குறியிட்டு ஒரு செய்தி முகநூலிலும், வட்சப்பிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கின்றது
சில நாட்களுக்கு முன்பு அம்பாறை பள்ளிவாயலில் எரிந்து மீதமாகவிருந்த குர்ஆன் பிரதியின் வசனங்கள் என்று கூறி ஒரு செய்தி பரவியது அந்த செய்திக்கு கிடைத்த லைக்கினதும், லவ்வினதும், செயாரினதும் வெற்றியே இந்த செய்தியையும் பகிர தூண்டியிருக்கின்றது.

முழு மனித சமுதாயத்துக்கும் ஒரு வழிகாட்டியாகவே இதனை நாம் இறக்கி வைத்துள்ளோம் என்று அல்குர்ஆன் கூறுவதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவில்லையா சுபஹானல்லாஹ் போட்டு இப்படியான செய்தியை பரப்புவதில் அர்த்தமில்லை என்பது, அது மட்டுமா, இது அல்லாஹ்வின் வார்ப்பு, அல்லாஹ்வை விட மிகச்சிறந்த முறையில் வார்ப்பவர் யார் உள்ளார் என்று அல்குர்ஆன் மேலும் கேட்கிறது.
மனிதன் ஒரு புத்தகத்தை எழுதி அந்த புத்தகம் தீயில் எரிந்து அதில் சில பக்கங்கள் எஞ்சியிருந்து அந்த பக்கங்கள் சில அர்த்தங்களை கொடுத்தால் நாம் ஆச்சரியப்பட முடியும் ஏனெனில் தீர்க்க தரிசனமான முறையில் செயற்படும் எந்தவொரு மனிதனும் உலகில் இல்லை என்பதால். ஆனால் இறைவனின் வார்த்தைகள் அப்படியல்ல எந்தவொரு காலத்துக்கும் பொருந்திப்போக கூடியது.
அல் குர்ஆனின் எந்தவொரு பக்கத்தையும், எந்தவொரு வசனத்தையும் எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொரு வசனத்திலும், சொல்லிலும் பல நூறு அர்த்தமிருக்கும் அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் அல் குர்ஆனை ஒரு நாளில் ஒரு தடவையாவது சரியாக ஓதி வரவேண்டும், அதை விட்டு விட்டு அல் குர்ஆனை தொட்டு பார்க்காமல் அதில் என்ன இருக்கின்றது என்று தெரியாமல் வாழும் போது, இப்படியான குர்ஆன் வசனங்கள் எல்லாம் மனித குலத்துக்கு அதிசயமான ஒன்றாகவே தெரியும்.
இன்னும் சில காலங்களின் பிறகு அல் குர்ஆனின் புகைப்படத்தை பரப்பி இதுதான் அல் குர்ஆன் என்று சொன்னால் சுபஹானல்லாஹ் இதுதானாம் அல் குர்ஆன் என்று கூறி அதையும் வட்சப் வழியாக பரப்பிவிடும் நிலைமை தோன்றி விடுமோ என்று அச்சமாக இருக்கின்றது, அல் குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும் எந்தவொரு மனிதனுக்கும் அதன் வசனங்கள் ஆச்சரியத்தை கொடுக்காது.
அம்பாறை பள்ளிவாயலில் எரிந்து மீதமாக கிடந்த குர்ஆன் வசனமும் பல அர்த்தங்களை கொடுத்தது அதை பகிர்ந்தீர்கள், திகன பள்ளிவாசலில் எரிந்து மீதமாக கிடந்த குர்ஆன் வசனங்களும் பல அர்த்தங்களை கொடுத்தது அதையும் பகிர்கிறீர்கள், இன்னும் எங்காவது எஞ்சிக்கிடக்கும் குர்ஆன் வசனங்களும் அதேமாதிரி பல அர்த்தங்களையே கொடுக்க போகிறது.
ஏனெனில், இது இறைவனின் வார்த்தை அதில் உள்ள ஒவ்வொரு வசனங்களும் அர்த்தமிக்கவை, புரிந்துகொள்ள வேண்டுமானால் குர்ஆனை ஓதுங்கள், மாஷா அல்லாஹ், சுபஹானல்லாஹ் போட்டு பகிர்ந்து கொண்டிருக்கமாட்டீர்கள்.
-Razana Manaf-
0 Comments