இதற்கு மேல் நடப்பதற்கு எதுவுமேயில்லை. இலங்கை முஸ்லிம்கள் மீது பேரினவாதிகளின் கோரத்தாண்டவம், அவர்கள் எந்த வகையில் எல்லாம் ஆட நினைத்தார்களோ, அந்த வகையில் எல்லாம் நடைபெற்று முடிந்துவிட்டது. நடந்து முடிந்தவுடன் பார்வையாளர்களாகவே பாதுகாப்பு படையினர் வந்து சேர்ந்தனர். இது அம்பாறையிலும் அவ்வாறு தான், கிந்தோட்டையிலும் அவ்வாறு தான். இன்னும் சில இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் சூழ நின்று பாதுகாக்க அனைத்தும் நடந்தேறியுமிருந்தது. எம்மவர்கள் யாராவது எதிர்த்தாக்குதல் செய்ய முனைந்தால், இனவாதிகளை பாதுகாக்க பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து வருவார்கள். இதனை களத்தில் நின்ற எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் நன்கே கண்ணாற கண்டு களித்துமிருந்தனர்.
இப்படியான ஆட்சியை தாங்கும் தூணாக முஸ்லிம்கள் இருப்பது வெட்கத்துக்குரியது. இவ்வாறான அரசு எமக்கு தேவையுமில்லை. இதனை நான் மாத்திரம் கூறவில்லை. அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது வாய்களினாலேயே கூறியிருந்தனர். அவர்கள் கூறுவதோடு மாத்திரம் அனைத்தையும் நிறுத்தி கொள்கிறார்கள். எதனையும் செயல் ரீதியாக செய்து காட்டிய பாடில்லை. இன்று எம்மவர்கள் அமைச்சுப் பதவிகளை சுமந்திருப்பதால், எதனையும் சாதிக்க முடியாது. ஒருவர் அமைச்சுப் பதவியை சுமந்துள்ள காலம் பூராகவும், குறித்த அரசுக்கு விசுவாசத்துடன் இருந்தேயாக வேண்டும். அப்படி கூறியே அமைச்சையும் பொறுப்பெடுப்பார்கள். முஸ்லிம் அரசியல் வாதிகளும் த.தே.கூவை போன்று, எந்தவிதமான அமைச்சுப் பதவிகளையும் வகிக்காது இருக்கும் பட்சட்சத்திலேயே பலமான அழுத்தத்தை வழங்க முடியும்.
இன்றைய அரசு ஸ்திரத்தன்மையற்ற ஒரு நிலையில் இருப்பதால், பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்கை மிகவும் பேரம் பேசும் சக்தி கொண்டது. இதனை கொண்டு இப் பிரச்சினைகளின் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் அறியப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். உரிய நஸ்டயீடுகளும் வழங்கப்படல் வேண்டும். இது கண்டிக்கு மாத்திரமன்றி அளுத்கமையில் இருந்து தொடங்கி கண்டி கலவரம் வரையானவற்றுக்கு கிடைக்கப்பெறுதல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே, எதிர்காலத்தில் இவ்வாறான இன்னுமொரு பிரச்சினை வராமல் தடுக்க முடியும். அவ்வாறன்றி, பிரச்சினை முடிந்துவிட்டதே என இவ்வரசுடன் மீண்டும் முஸ்லிம் ஆட்சியாளர்கள் கூடிக் குலாவுவார்களாக இருந்தால், இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது. இதனை அமைச்சுப் பதவிகளை சுமந்து ஒரு போதும் செய்ய முடியாது.
முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமூகம் மீது உண்மை பற்றுக்கொண்டவர்களாக இருந்தால், இப் பிரச்சினைகளுக்கான உண்மை தீர்வு கிடைக்கும் வரை, தாங்கள் வகிக்கும் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட வேண்டும். உரிய தீர்வு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டால், இவ்வரசுக்கு எதிரான செயற்பாட்டை ஆரம்பிக்க வேண்டும்.
அ அஹமட் -
0 Comments