Subscribe Us

header ads

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வயது முதிர்ந்த வயோதிபர்கள், தலை நரைத்த தாத்தா மார்கள் சேர்ந்த க்ரூப் செட் ஓர் அழகிய வாழ்க்கை கதை



இந்தளவுக்கெல்லாம் நாகரீகமோ தொழில்நுட்பமோ மாறியில்லாத காலப்பகுதி அது... அவ்வளவெல்லாம் இல்லை, கிட்டத்தட்ட ஒரு ஆறேழு வருடங்களுக்கு முன்னர்தான். மனிதன் இந்த ஸ்மார்ட் போன்களும், பேஸ்புக்கும், வட்ஸ்அப்பும் கண்டு பிடிக்காத Nokia 1100 க்கள் ஊரில் ஓரிரு பெரிய தலைகள் வைத்திருந்த காலமது...

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வயது முதிர்ந்த வயோதிபர்கள், தலை நரைத்த தாத்தா மார்கள் ப்லேண்டீ கடையடியிலும், அஸர் தொழுது விட்டு பள்ளி முற்றத்து மாங்காய் மர நிழலிலும் தமது Group chat களை நடாத்திய காலம்.

Plan tea உம் Bun ஒன்றும் அல்லது வடை ஒன்றோடும் அவர்களது பேச்சு இலங்கை அரசியலிலிருந்து உலக அரசியல் வரை பேசப் பட்டன. சிவாஜி கனேஷன், எம்.ஜீ.ஆர், ராதா, மனோரம்மா, சரோஜா தேவி என சினிமாவும், ஊர்க் கதைகளும் அளக்கும் காலமது... சில வேளைகளில் அஸருக்குப் பின்னர் ஆரம்பித்தால் இஷா வரையிலும் அந்தக் கதைகள் தொடரும், எமக்குக் கேட்கவும் சுவாரஷ்யமாக இருக்கும்.

அப்போதெல்லாம் நாம் O/L அல்லது அதற்குக் கீழே உள்ள வகுப்பில் படிக்கும் காலம். ஊர்ப் பக்கங்களில் அவ்வாறு கதையளந்து கொண்டிருப்பவர்களில் எங்களது தாத்தாவும் இருந்தால் அல்லது தெரிந்த ஓரிரு வயோதிபர்கள் இருந்தால் இடையில் நாங்களும் மூக்கைப் போட்டு ஓரிரு கேள்விகள் கேட்டு அவர்களது அறிவை மெச்சிக் கொள்வோம்.

"இந்தக் காலத்துல என்ன சினிமாடா... ஆபாசமா இருக்கு, அந்தக் காலத்துப் பாடல்களைக் கேட்டுப் பார், எத்தனை அர்த்தமுள்ள பாடல்கள்" என்பார்கள். அவர்கள் சொல்வதில் 100% உண்மையும் உண்டு.

"முந்தி எங்கட ஊர் இப்பிடி இருக்கல்ல, ஒரு பொம்புள தனிய ரோட்டுல போக மாட்டா, பொம்புளப் புள்ளைகள் வெளிய எறங்க மாட்டாங்க, இப்ப அதெல்லாம் இல்லாமப் பெய்ட்டு, கலாச்சாரம் எல்லாம் சீரழிஞ்சே இருக்கு" என்று தமது வரலாற்று ஏடுகளை அள்ளி வீசுவார்கள்.

பிரேமதாஸ, சிறீமா, பண்டாரநாயக்க, LTTE பிரச்சினை, JVP பிரச்சினை என அவர்களது அரசியல் கதைகளைக் கேட்கவே ஆசையாக இருக்கும்.

அதைத் தாண்டி அவர்கள் சொல்லும் ஜின் கதைகளும், பேய்க் கதைகளும்...

"பின்னால தெறத்திட்டு வந்த பேய், மாடறுக்குற எடத்துல ரெத்தம் குடிக்க வார பேய், அவங்க கண்ணால கண்ட பேய்கள், அதிலிருந்து எப்பிடித் தப்பிச்சாங்க என்ற கதைகள், பக்கத்து ஊரு மத்ரசால நடக்குற ஜின் கதைகள்" என நம்ப மறுத்தாலும் கேட்க நினைக்கும் அந்தக் கதைகள்....

இப்போதெல்லாம் நவீனமயமான உலகிலு இவற்றைக் காண்பது அறிது. டிஜிட்டல் வாப்பாமார்கள் வந்து விட்டதால் எல்லா செட்டிங்கும் வட்ஸ்ஆப்பிலேயே க்ரூப் செட்டில் நடந்து முடிந்து விடுகின்றன.

நோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர்கள் இன்று கட்டிலோடு ஆகி விட்டதனாலும், தெருவோர டீக்கடைகள் இன்று ஹோட்டல்கள் ஆகி விட்டதனாலும் இவற்றைக் காண்பது அறிதுதான்.

என்றாலும் ஆங்காங்கே சில கிராமங்களில் இன்னும் இந்தக் கலாச்சாரங்கள் காணப்படுவது பழமை இறந்து விடவில்லை என்பதற்குச் சான்றே.

ஒரு காலத்தில் கடையடிகளில் கதையளந்த ஆண்களும், வீட்டுத் திண்ணைகளில் பேன் பார்த்து கதையளந்த பெண்களும் இன்று வேறொரு டிஷைனுக்கு மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவலைக்குறியதே...

ஒருவேளை எமது தலைமுறையோடு இந்தக் கலாச்சாரம் வேறோடு அழிந்தும் போய் விடலாம்...

என்றாலும்.....

அந்த தெருவோர டீக்கடைகளும், 
வீட்டுத் திண்ணைகளும் 
உண்மையில் இந்தத் தசாப்தத்தின் அழியாச் சின்னங்கள்....



-Sabith thaha-














Post a Comment

0 Comments