1 உள்ளூராட்சித் தேர்தல்கள் என்பது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு அமோக வெற்றியை தரும் உற்சாக டானிக் போன்றது.இரண்டாம் வகுப்பு மாணவனின் கணித வினாத்தாளை கொழும்பு யுனிவர்சிட்டியின் கணித பேராசிரியர் எழுதுவது போல அத்தனை இலகுவானது..' இலகு ' என்பதை இங்கே மேலும் எளிமைப்படுத்த வேறு வசனம் கிடைக்கவில்லை.ஆனால் சரித்திரத்தில் முதல் தடவையாக ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பயங்கரமாய் மண் கவ்வி இருக்கிறது... சமூகவலைதளங்கள் வேறு சமூகம் வேறு என்பதை நெற்றிப் பொட்டில் அடித்துச் சொல்லி இருக்கின்றன தேர்தல் முடிவுகள்..
2 முந்நூற்று நாற்பது உள்ளூராட்சி சபைகளில் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின் படி 250 இற்கும் மேல் மகிந்தவின் தாமரை மொட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் தான் சிங்கள மக்களின் ஹீரோ என்பதை நிரூபித்து இருக்கிறார் மகிந்த ராஜபக்ச.ஆட்சி செய்பவர்கள் ஆண்களாக இருந்தால் கட்டாயம் ஆண்மைத்தனம் இருக்க வேண்டியதுடன் பர்ஸனாலிட்டியும் இருக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் அடித்துச் சொல்லி இருக்கிறார்கள்...
3 சமஷ்டி, புதிய அரசியல் யாப்புத் திருத்தம் உட்பட புரியாத வசனங்கள் பிரிவினைவாத கோஷங்களாக சிங்கள மக்களின் வயிற்றில் அணுகுண்டை சுமக்க வைத்தன.விளைவு நேற்று திருமணப் பதிவு முடிந்த ஜோடிகளுடன் ,மூக்கிலும் வாயிலும், வயர் போட்டு இருந்த நோயாளிகள் எல்லாம் சாரி சாரியாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து மேளம் அடித்துவிட்டுச் சென்றனர்..
4 ஊழலை ஒழித்து மகிந்த ராஜபக்சவின் சொத்துக்களை எல்லாம் மீட்டு வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை நிரப்பப் போவதாய் சொல்லிக் கொண்டு வந்த இந்த கூட்டம் பட்டப் பகலில் மத்திய வங்கியைக் கொள்ளையடித்தது..இது மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப் போன்றது...இந்தத் தோல்வியின் திருஷ்டிப் பொட்டு தான் மேட்டுக்குடிகளின் மத்திய வங்கி கொள்ளை..
5 மூன்று வருடங்களாய் இமயமலைத் துறவி போல அடங்கி இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திடீர் என்று உருவேறி ' நான் அப்படி செய்வேன் ' இப்படி செய்வேன் என்று குதித்தார்.இந்தக் களேபரங்களால் வீடுகளில் இருந்த குழந்தைகள் பயந்ததைத் தவிர வேறு ஒன்றும் நடக்கவில்லை.மகிந்த காலத்தில் தனக்கு அநீதி இழைக்கப்படதாய் புலம்பிய மைத்திரி அவரது தலைமையிலான ஆட்சியிலும் பங்காளிக்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் அநீதி இழைக்கப்பட்டதாய் புலம்பினார்..' போய்யா ஜோக்கர் ' என்று மக்கள் ஆப்படிக்க தேசம் எங்கும் வெறும் 8 வீதம் வாக்குகளையே பெற்று இருக்கிறார்..
6 ரணில் மைத்திரியின் கட்சியை உடைத்து குபரேனாகப் பார்த்தார்..நினைத்தது போல கட்சியை இரண்டாக உடைத்து இருக்கிறார்..50:50 என்று அல்ல..95:5. என்று..ஸ்ரீலங்கா சு.க இன் 95 வீதம் வாக்குகள் மகிந்தவுக்கு சென்று இருக்கின்றன..இவரைத்தான் அரசியலில் நரி என்கிறார்கள். செய்வது எல்லாம் மிஸ்டர் பீன் தனமாய் இருக்கிறது..
7 வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லிம் ஏரியாக்களில் ஐக்கிய தேசியக்கட்சி கொஞ்சம் எழுந்து நிற்கிறது..இது என்ன ஐக்கிய தேசியக்கட்சியா ? இல்லை முஸ்லிம் காங்கிரஸா ? எப்பேர்பட்ட கட்சி இது ?கொஞ்சம் கொஞ்சமாய் முஸ்லிம் காங்கிரஸாய் மாறிக் கொண்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பார் என்று அலறுகிறார்கள் அடிமட்டத் தொண்டர்கள்
8 இந்த நாட்டுக்கு ஜனநாயகம் , ஊடக சுதந்திரம் எல்லாம் ஓரளவுக்கு மேல் சரிப்பட்டு வராது.ஜே.ஆர், பிரேமதாஸா, மகிந்த போன்ற அதிரடித் தலைவர்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.ஐரோப்பா சம்பிரதாயத்தைக் கட்டிக் கொண்டு அழும் ரணில் அதே சம்பிரதாயப்படி தேர்தல் தோல்விக்குப் பொறுப் பேற்று பதவி விலகி லண்டன் போய் கன்ஸர்வேடிவ் கட்சியிலோ லிபரல் கட்சியிலோ இணைந்து கொண்டால் தான் யூ.என்.பீ உருப்படும்.ரணிலால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியாது..
9 ஜே.வி.பி வழக்கம் போல தேர்தல் மேடைகளில் ஊழலை ஒழித்தது.ஜே.வி.பி எதிர்பார்த்தது போல பெறுபேறுகள் அமையவில்லை.இருந்தாலும் ஒரே ஒரு ஜே.வி.பி உறுப்பினர் சபையில் இருப்பது ஆயிரம் யானை பலம்.
10 இனிமேல் விசேட நீதிமன்றங்கள் அமைத்து மகிந்தவையும் பரிவாரங்களையும் உள்ளே தூக்கிப் போட்டு , குடியுரிமையைப் பறித்தால் நாடு பற்றி எரியும்...இந்த ஜோக்கர்கள் எப்போதோ செய்து இருக்க வேண்டும்..இனி எல்லாம் ஓவர்.....நல்லாட்சி நல்லடக்கம் செய்யப்பட்டது.
Zafar Ahamed.......
0 Comments