பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத்தின் ஊடாக பெண்களுடன் தொடர்பு கொண்டு நட்புறவாடி அவர்களிடம் தங்க நகை மற்றும் உடைமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அது தொடர்பிலான பிரதான சந்தேக நபர் ஒருவரை நேற்று முன் தினம் இரவு கைது செய்துள்ளனர்.
அவிசாவளை, சீதாவக்க வித்தியாலய மாவத்தையில் வைத்து மிரிஹான விஷேட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
33 வயதான நிவித்திகலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் சமூகவலைத்தளங்கள் ஊடாக பெண்களுடன் நட்புறவாடி திருமணம் புரிவதாக கூறி இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தான் நட்பை பேணுகின்ற பெண்களை நேரில் அழைத்து அவர்களிடம் தங்க நகை மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்களை சந்தேக நபர் கொள்ளையிட்டுள்ளார்.
இந் நிலையில் சந்தேக நபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் பாதுக்க, களுத்துறை வடக்கு மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் பல்வேறு கொள்ளைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களை புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments