Subscribe Us

header ads

உங்கள் அக்கவுன்ட்டின் ஹேக்கிங் ஹிஸ்டரியைத் தெரிந்துகொள்ள உதவும் இணையதளம்..! #HaveiBeenPwned


“1) 5 GB வரை உங்கள் டேட்டாக்களை இலவசமாக “கிளவுட் ஸ்டோரேஜில்” சேமித்துக்கொள்ளலாம். 
2) எங்கள் இணையதளத்தில் புதிய கணக்கைத் துவங்கினால் வாங்கும் பொருளில் 30% தள்ளுபடி.
3) இந்த சர்வேயில் பங்கெடுத்து பதிலளித்தால் 500 ரூபாய் மதிப்புள்ள அமேசான் கூப்பன் இலவசமாக வழங்கப்படும்.
4) எங்கள் இணையதளத்தில் பயனர் கணக்கு உள்ளவர்களுக்கே உள்நுழைய அனுமதி"
இந்த வாசகங்களை இணையத்தில் காணாதவர்களே இருக்க முடியாது. இப்படிப்பட்ட கவர்ச்சிகரமான விளம்பரங்களை நிஜமென நம்பியோர் ஆயிரக்கணக்கில் இருப்பர். ஆனால், தான் அளித்த தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கும் அவர்களுக்கு என்றாவது ஒரு நாள், அவர்களுடைய பெர்சனல் போட்டோக்கள் களவாடப்படும் போதோ அல்லது வங்கியிலுள்ள பணம் நூதமான முறையில் திருடப்படும் போதோதான் அதன் தீவிரம் தெரிய வருகிறது.
அதேபோன்று, ஜிமெயில் முதல் ஃபேஸ்புக் வரை, ட்விட்டர் முதல் இன்டர்நெட் பாங்கிங் வரை என ஒரே கடவுச்சொல்லைப் பெரும்பாலான இணையதளங்களுக்குப் பயன்படுத்துவோரும் அதிகளவில் உள்ளனர். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு தரப்பினரிடமும் இதுகுறித்து நாம் கேட்டோமானால் “தாங்கள் கணக்கு வைத்துள்ள இணையதளங்கள் பாதுகாப்பானவை என்றும், அதிலிருந்து எங்களது தகவல்கள் திருடமுடியாத வகையில் சேமிக்கப்பட்டுள்ளன” என்றும் கூறுவார்கள்.
அப்போது, கிளவுட் ஸ்டோரேஜ் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமான Dropboxன் 164,611,595 கணக்குகளும், LinkedInன் 164,611,595 கணக்குகளும், யாஹூ நிறுவனத்தின் 453,427 கணக்குகளும் என 225 இணையதளங்களின் 3,808,893,616 கணக்குகள் பல்வேறு இணைய ஹேக்கிங் குழுக்களால் திருடப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை இலவசமாக இணையத்தில் எவரும் பார்க்கும், பதிவிறக்கம் செய்யும் வகையில் உள்ளன எனக்கூறும் https://haveibeenpwned.com என்னும் இணையதளத்தின் கூற்றுக்கு உங்கள் பதிலென்ன?. இதில் நகைச்சுவை மற்றும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் ஹேக்கிங் மற்றும் வைரஸ் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் Avast Antivirus நிறுவனத்தின் 422,959 கணக்குகளும் அப்பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களும் திருடப்பட்டு இணையத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்பதுதான்.
சரி... இதுபோன்ற ஹேக்கிங் முயற்சிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி?
 1) ஓர் இணையதளத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்த பிறகே, அதில் கணக்கு தொடங்க வேண்டும். மேலும், அந்த கணக்கிற்கான கடவுச்சொல் உங்களுடைய மற்ற கணக்குகளின் கடவுச்சொல்லைவிட வித்தியாசமானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும். 
2) இலவசமாகக் கிடைக்கிறதென்று நம்பகத்தன்மையற்ற இணையதளங்களில் உங்களின் போட்டோக்கள் மற்றும் தகவல்களைப் பதிவேற்றுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 
3) கிப்ட் கூப்பன் மற்றும் தள்ளுபடி போன்ற கவர்ச்சிகரமான, நம்பிக்கைத்தன்மையற்ற சர்வே, ப்ரோமோஷனல் சலுகைகள் போன்ற விளம்பரங்களுக்குப் பதில் அனுப்புவதைத் தவிர்க்கவும். 
4) தங்களின் தனிப்பட்ட கணினி, செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைத் தவிர்த்து மற்றவரின் பொருள்களைப் பயன்படுத்தினால் தவறாமல் லாக்-அவுட் செய்யவும்.
5) சிறந்த ஆன்டி-வைரஸ் ஒன்றைப் பதிந்து அதையும், கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாஃப்ட்வேரையும் தொடர்ந்து அப்டேட் செய்யவும்.
மேற்கண்டவை தனிப்பட்ட தகவல்களைப் பறிகொடுக்காமல் இருப்பதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகும். ஆனால், இவற்றை மீறியே Linkedin, Avast, Yahoo, Sony மற்றும் Zomato போன்ற எண்ணிலடங்கா இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுதகவல்கள் திருடப்பட்டுள்ளன. இப்படி உங்கள் ஆன்லைன் அக்கவுன்ட்களில் நடக்கும் ஹேக்கிங் முயற்சிகள் குறித்து நமக்கு எச்சரிக்கும் பணியைச் செய்கிறது ஓர் இணையதளம். 
https://haveibeenpwned.com இணையதளத்திற்கு சென்று அதன் முகப்புப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை இட்டால், ஒரு சில நொடிகளில் இதுவரை அக்குறிப்பிட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பயனர் கணக்கு எப்போது, எங்கு, எப்படித் திருடப்பட்டது என்ற தகவலை அளிக்கிறது. 
​மேலும், உங்களுக்குத் தேவையென்றால் அந்த இணையதளத்தின் Notify me என்பதைக் கிளிக் செய்து உங்களின் மின்னஞ்சலை அளித்தால், எதிர்காலத்தில் உங்கள் மின்னஞ்சல் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டால் உங்களுக்குத் தானாக மின்னஞ்சல் வந்து சேரும். அவ்வாறு எனக்கு சமீபத்தில் வந்த எச்சரிக்கை மின்னஞ்சல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

நமது மின்னஞ்சலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கணக்குகள் ஹேக் செய்யப்பட்டால் எச்சரிக்கை செய்யும் இணையதளங்கள் பல இருந்தாலும் https://haveibeenpwned.com என்ற இந்தத் தளம்தான் பிரபலமானதாகவும், சிறந்ததாகவும். கருதப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரும், இணையதள பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியில் முக்கியமானவருமான டிராய் ஹண்ட் என்பவர்தான் இந்த இணையதளத்தை உருவாக்கியவர் ஆவார். தற்போது அதிகரித்து வரும் இணைய திருட்டைப் பற்றி மக்களுக்கு இலவச சேவையாக அளிக்கவும், தனது தொழில்நுட்ப அறிவை வெளிக்காட்டவும், வளர்க்கவும் இதைத் தொடர்ந்து நடத்தி வருவதாக டிராய் தெரிவித்துள்ளார். 



Post a Comment

0 Comments