Subscribe Us

header ads

பொருளாதாரப் பிரச்சினையை மூடி மறைப்பதற்காகவே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம்


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையை மூடி மறைப்பதற்காக அரசு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கிளப்பியுள்ளது என்றும் இதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றால் அரசு இதை உடனடியாக கட்டுப்படுத்தும் என்றும் ஜேவிபி எம்பி சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.நாட்டில் இப்போது முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தொடர்ச்சியாக தீ வைக்கப்பட்டு வருகின்ற நிலைமை தொடர்பில் கருத்துக் கூறும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;

நாட்டில் இருக்கின்ற பொருளாதாரப் பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக இன்று இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.தினமும் ஒரு கடை என்ற அடிப்படையில் முஸ்லிம்களின் கடைகளுக்குத் தீ வைக்கப்படுகின்றது.சிங்கள,முஸ்லிம்,தமிழ் மக்கள் ஒன்றோடொன்று மோதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

நாட்டில் இருக்கின்ற பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்கு பதில் இல்லாமல்போனால் ஆட்சியாளர்கள் நாடுகின்ற ஒரே தீர்வுதான் இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றைத் தூண்டுவது.இந்த நாட்டில் இப்போது இடம்பெறுகின்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதல்கள்  தொடர்பிலும் சரி,தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பிலும் சரி அனைத்து இன மக்களும் மிகத் தெளிவாக இருக்கின்றனர்.

சிங்கள மக்கள் அப்பாவிகள்.அவர்கள் ஏனைய மக்களை மதிக்கின்றனர்;அன்புடன் பழகுகின்றனர்.ஆனால்,யாராவது நினைத்தால் இந்த உறவில் விசத்தைக் கலக்க முடியும்.மஹிந்த ஆட்சி வீழ்ந்ததன் பின் எந்தவோர் இனவாதத் தாக்குதல்களும் இடம்பெறவில்லை.எந்தவொரு பள்ளிவாசலும் தாக்கப்படவில்லை;எந்தவொரு வர்த்தக நிலையங்களும் எரிக்கப்படவில்லை.

அனால்,இப்போது ஒரே அடியாக திடீரென முஸ்லிம்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.இது எப்படி சாத்தியம்?இதற்குப் பின்னால் அரசு உள்ளது.அப்படி அரசு இல்லையென்றால் அரசு இதை உடன் நிறுத்த வேண்டும்.அரசால் நிறுத்த முடியாவிட்டால் அரசு இந்தத் தாக்குதல்களின் பின்னால் இருக்கின்றது என்றே அர்த்தம்.

மஹிந்தவின் ஆட்சியில் நாம் இதுபோன்ற ஒரு நிலைமையைக் கண்டோம்.அவர்கள் இனவாதத் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கிய விதத்தை நாம் அறிவோம்.இந்த நாட்டில் முஸ்லிம்களோ தமிழர்களோ சிங்களவர்களோ கிறிஸ்தவர்களோ இனவாதிகளும் இல்லை மதவாதிகளும் இல்லை.

இந்த மக்களிடையே இனவாத-மதவாத விசம் தெளிக்கப்படுகின்றது.அவ்வாறு தெளிப்பவர்கள் அரசியல்வாதிகள்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.ஓர் உயிர் போனாலும் நாம் அதற்காக பொறுப்புக்கூற வேண்டும்.ஆகவே,அரசு இதை உடன் நிறுத்த வேண்டும்.என்றார்

Post a Comment

0 Comments