ஐக்கிய தேசிய கட்சி இனவாதத்தை நாடி இருந்தால் 1999ஆம் ஆண்டும் 2000ஆம் ஆண்டும் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாகி இருப்பார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட எம்பி புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்;
நாட்டில் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதல்களுக்கும் எமது அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.ஊடகங்கள் அனைத்தும் அரசுமீதே குற்றம் சுமத்துகின்றன.நாமே இந்தத் தாக்குதல்களை முன்நின்று நடத்துவதுபோல் கருத்து வெளியிடுகின்றன.
நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டு வருகின்றது.மக்கள் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர்.மாத்தறையில் விளையாட்டுப் போட்டி ஒன்று இடம்பெற்றபோது அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றின் வளவில் தேசிய கொடியும் பௌத்த கொடியும் ஏற்றப்பட்டன.அந்தளவு தூரம் மக்கள் ஒற்றுமையாக-புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் இனவாதத்தின்மீது நம்பிக்கை வைத்ததில்லை;அதை ஒருபோதும் நாடியதில்லை;அதைக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சி செய்ததில்லை.ஐக்கிய தேசிய கட்சி இனவாதத்தை நாடி இருந்தால் 1999ஆம் ஆண்டும் 2000ஆம் ஆண்டும் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாகி இருப்பார்.
ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சிகூட இந்த இனவாதத்தை நாடவில்லை.ஒட்டுமொத்த அரசும் இதை எதிர்க்கின்றது.இனவாதத்தின் ஊடாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்கில்லை.
இழந்த அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்ளத் துடிக்கின்ற ஒரு கூட்டமே இந்த இனவாதச் சம்பவங்களின் பின்னால் உள்ளது.இருந்தும்,இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை.-என்றார்.
0 Comments