Subscribe Us

header ads

இனவாத சம்பவங்கள் அத்தனைக்கும் காரணம் கோட்டாபே ராஜபக்ஸதான்



நாட்டில் இப்போது இடம்பெற்று வரும் இனவாத சம்பவங்கள் அத்தனைக்கும் காரணம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ஸதான் என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் ஓய்ந்திருந்தன.அவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் உச்சத்தில் இருந்தது.அளுத்கமை,பேருவளையில் கலவரம் ஒன்றை நடத்தி முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தனர்.

இதன் காரணமாகவே முஸ்லிம்கள் மஹிந்தவின் ஆட்சியை வெறுத்து மைத்திரியின் ஆட்சியை ஆதரித்தனர்.சில காலம் சென்றதும் மீண்டும் முஸ்லிம்களின்மீது தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளன.இந்தத் தாக்குதல்கள் அனைத்துக்கும் காரணம் கோட்டாபே ராஜபக்ஸதான்.

பொது பல சேனா அமைப்பை உருவாக்கி அதை வளர்த்தெடுத்துப் பாதுகாத்து வந்தவர் கோட்டாதான் என்பதை அனைவரும் அறிவார்கள்.அந்த அமைப்பின் சொந்தக்காரர் அவர்தான்.இப்போதும் பொது பல சேனா அராஜகத்தில் இறங்கியுள்ளது.கோட்டாபேதான் இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றார்.

ஆனால்,மஹிந்த அணியினர் எம்மீது பலி போடுகின்றனர்.ஆட்சியைத் தக்கவைப்பதற்காக நாமே இந்தத் தாக்குதலை நடத்துகின்றோம் என்று கூறுகின்றனர்.நாம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கும் இந்த இனவாத செயற்பாடுகளுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது?நிலையான ஓர் ஆட்சி இருக்கும்போது எதற்கு இனவாதம்?

நாம் இனவாதத்துக்கு எதிரானவர்கள்.யுத்தத்தால் அழிந்த நாட்டை மீண்டும் அழிவுக்குள் தள்ளுவதற்கு  இடங்கொடுக்கமாட்டோம்.மூவின மக்களையும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் மதித்து நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது இலக்கு.இனவாதத்தைக் கொண்டு நாட்டை அழிப்பதல்ல எமது திட்டம்.-என்றார்.

Post a Comment

0 Comments