மசகு எண்ணை வருமானம் வளர்ச்சியடைந்த ஆரம்ப காலங்களில் எகிப்தில் கமால் அப்துல் நாசரின் ஆட்சியில் இருந்த கெடுபிடிகள் காரணமாக புலம்பெயர்ந்திருந்த இஹ்வான்களை( Muslim Brotherhood members) அவர்களின் கல்வி தகமை காரணமாக வளைகுடா நாடுகள் தமது நாட்டின் சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திக்காக பயன்படுத்திக்கொண்டமை பரகசியமானது. ஆனாலும் முரண்நகை என்னவென்றால் தமது நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தியபோதும், அரசியல் களத்தை பொறுத்தவரை சகோதரத்துவ கட்சியின் செல்வாக்கு உள்நாடுகளின் அதிகரித்துக்கொண்டு சென்றதால், இஹ்வான்களை எப்போதுமே எதிரணியாக அல்லது தமது ஆட்சிக்கு ஆபத்துவிளைவிக்க கூடியவர்களாகவே இதே ஆட்சியாளர்கள் நிலைநிருத்தியிருந்தார்கள்.
இதில் GCC ஐ பொறுத்தவரை எல்லா நாடுகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கவும் இல்லை. உதாரணமாக சவுதியும் அமீரகமும் (UAE) இஹ்வான்களை அரச எதிரியாக பார்த்த அதேநேரம் பஹ்ரெயினிலும் குவைத்திலும் இஹ்வான்கள் அரசியலில் ஈடுபடும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அதனால்தான் இன்றுவரை இஹ்வான்கள் இந்த நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக கூட இருக்கிறார்கள்.
கட்டாரை பொறுத்தவரை சகோதரத்துவ கட்சி 1999 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு விட்டாலும், கட்டாரில் இவர்கள் சமூக கல்வி அரசியல் விவகாரங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதனால் கட்டார் அரசுக்கும் இஹ்வாங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலை இருக்கவில்லை. மறுபக்கம் கட்டாரின் வெளிவிவகார கொள்கை, ஒரு சிந்தனை பள்ளியை சார்ந்து நிற்காமல் பெரும்பாலும் இஸ்லாமிய அமைப்புக்களை பலப்படுத்தவதாகவே இருந்துவந்திருக்கிறது.
கட்டாரின் முன்னாள் மன்னர் கலீபா அல்தானியை 1996 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி ஊடாக ஆட்சி கவிழ்க்க எடுக்கப்பட்ட முயற்சிக்கு சவூதி அரேபியா பின்னணியில் இருந்தது என்ற குற்றச்சாட்டும், கட்டார் தன்னையும் சவூதி அரேபியாவுக்கு நிகராக முஸ்லிம் உலகின் சில அமைப்புக்களுடன் நெருங்கி செயல்படுவதற்குரிய காரணியாக அமைந்தது. இந்த சதிப்புரட்சியின் வடுக்கள் இருநாடுகளுக்கும் இடையில் ஆறாமல் தொடர்ந்தது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரபு வசந்தம் இரண்டாவது நெருடலை இந்த இரு நாடுகளுக்கும் இடையில் கொண்டுவந்தது. அரபு வசந்தம் ஏனைய அரபு நாடுகளில் சுற்றிக்கொண்டிருந்தாலும், வளைகுடா நாட்டு ஆட்சியாளர்களையும் ஒரு அச்ச நிலையிலேயே வைத்திருந்தது. அரபுலகில் நாங்களும் உங்கள் புரட்சிக்கு ஆதரவுதான் என்பதை காட்டிக்கொள்வதற்காக இந்த நாட்டு ஆட்சியாளர்கள் அரபுபுரட்சி ஏற்பட்ட நாடுகளில் ஏதாவது ஒரு தரப்பையும் ஆதரிக்கவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளபட்டன. லிபியா, எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் எதிரணிகளில் வெவ்வேறு தரப்பை ஆதரிப்பதற்காக சவூதி அரேபியாவுக்கும் கட்டாருக்கும் இடையில் ஒரு போட்டி நிலை நிலவிவந்தது.
கட்டார் ஒரு இஹ்வான் கொள்கையுடைய நாடு இல்லையென்றாலும் முர்சியின் ஆட்சியை ஆதரிப்பதற்கு களம் அமைக்கப்பட்டதும் இதன் பின்னணியில்தான். முர்சி எகிப்தை ஆட்சி செய்யும் காலங்களில் பல பில்லியன் டாலர் கடனாக கட்டார் வழங்கியிருந்த அதேநேரம் 3 பில்லியன் டாலர் செலவழித்து முர்சியின் ஆட்சியை சவூதி அரேபியா சிசியின் தலைமையில் ஒரு இராணுவ சதிப்புரட்சி மூலம் முடிவுக்கு கொண்டுவந்ததும் கட்டாருக்கும் சவூதி அரேபியாவுக்குமான பனிப்போர் உக்கிரம் அடைந்தது. இதனால் 2013 ஆம் ஆண்டு GCC இன் உறுப்புரிமையை பறிப்போம் என்றும் சவூதி அரேபியா கட்டாருக்கு எச்சரிக்கை விடுத்துவந்தது.
எனினும் 2013 இல் கட்டாரின் புதிய மன்னரின் வருகையுடன் உறவுகள் புதுப்பிக்கப்பட்டன. ஏற்கனவே இஹ்வாங்களின் முக்கிய உலமாவான செய்க் யூசுப் அல் கர்லாவியை நாடு கடத்தவேண்டும் என்றும் மிரட்டிக்கொண்டிருந்த சவூதி அரேபியா 2015 ஆம் ஆண்டு நடந்த உலக இஸ்லாமிய மாநாட்டு கௌரவ அதிதிகளில் ஒருவராக அவரையும் அழைத்திருந்தது மாத்திரமல்ல இஹ்வாங்களுடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்தது.
இத்தனைக்கும் பஹ்ரைனை பொறுத்தவரை எதிர்கட்சியாக இருக்கும் அல் மின்பர் என்ற இஹ்வான்களின் கட்சி கடந்த பதினைந்து வருடங்களாக அரசுடன் ஒரு நல்லிணக்கத்திலேயே இருந்துவருகிறார்கள். இவர்கள் அரசுக்கு ஆதரவு அளிக்காவிட்டால், பாராளுமன்றம் சியாக்களின் கட்சிக்கு சென்று விடும் என்பதே இதற்கு காரணாமாகும்.
இப்படி இணக்க சூழ்நிலை நிலவிய நிலையில், அமெரிக்காவுக்கான அபுதாபி தூதுவரும் டொனால்ட் ட்ரம்பின் மருமகனான குச்னரின் நெருங்கிய நண்பருமான யூசுப் அல் குதைபாவின் ஈமெயில்கள் லீக் ஆனதும், அதில் இஹ்வான்களை அமேரிக்கா தடை செய்வதற்கு இவர் ஊக்கப்படுத்திய விஷயங்கள் கசிந்திருந்ததும், டொனால் ட்ரம்ப் சவுதிக்கு விஜயம் செய்து அடுத்த நாளே கட்டார் மீதான தடை அறிவிக்கப்பட்டதும், இந்த இராதந்திர முறுகலின் முக்கிய காரணகர்த்தாவாக சவுதியை விட அபுதாபியே அதிகம் செயல்பட்டிருக்கிறது என்றும், என்றாலும் தடைக்காக சவுதி அரேபியாவின் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது என்றும் புலனாகிறது.
0 Comments