இனவாதிகளை கைது செய்ய வேண்டுமென்றால் யாழ்ப்பாணம் செல்லுங்கள்.அங்கேதான் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல இனவாதிகள் நிறைந்து கிடக்கின்றனர்.இனவாதிகளை வேறு எங்கிலும் தேட வேண்டாம் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;
அன்று இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளுக்கும் இன்று இடம்பெறும் இனவாத செயற்பாடுகளுக்கும் நாமே காரணம் என்று இந்த ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.எமக்கும் இந்த இனவாத செயற்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கடைகளுக்குத் தீ வைப்பவர்கள் பொது பல சேனாவுடன் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படுகின்றது.அதைப் பொலிசார்தான் தேடிப் பார்க்க வேண்டும்.பொது பல சேனாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.பொது பல சேனாவின் சொந்தக்காரர்கள் இந்த அரசில்தான் இருக்கின்றார்கள்.
இனவாதிகளை நீங்கள் தெற்கில் தேடாதீர்கள்.யாழ்ப்பாணத்துக்குச் செல்லுங்கள்.அங்கேதான் இனவாதிகள் அதிகம் உள்ளனர்.வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல இனவாதிகளை உங்களால் பிடிக்க முடியும்.வடக்கில் இருந்து தினமும் இனவாதக் கருத்துக்கள் தெற்கை நோக்கி அனுப்பப்படுகின்றன.
அந்த இனவாதிகள் ஓர் அசாதாரண நிலைமையை அங்கு உருவாக்கிக்கொண்டு வருகின்றனர்.பாரதூரமான நிலைமை இருப்பது வடக்கில்தானே தவிர தெற்கில் இல்லை.நாம் தெற்கில் இனவாதத்தை உருவாக்கவுமில்லை இனவாதிகளை உருவாக்கவுமில்லை.-என்றார்.
0 Comments