ரஸீன் ரஸ்மின்
கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட தலவில கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு சோதனை செய்யும் நடவடிக்கைகள், நேற்று (30) இடம்பெற்றது.
கற்பிட்டி பிரதேச செயலகம், பிராந்திய சுகாதார பணிமணை என்பனவற்றின் அனுசரணையில் கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த டெங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கற்பிட்டி பிரதேச சபை செயலாளர் ஆர்.மங்கள ராமநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த டெங்கு சோதனை நடவடிக்கையில், பிராந்திய சுகாதாரப் பணிமனையில் கடமையாற்றும் சுகாதார பரிசோதகர்கள், தலவில கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது, தலவில கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் உட்பட பொதுமக்கள், இளைஞர் அமைப்புக்களின் பூரண ஒத்துழைப்புக்களுடன் குறித்த பிரதேசத்தில் டெங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (TM)



0 Comments