இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான குழு 'பி' கிரிக்கெட் போட்டி கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலையில் உள்ள இலங்கைக்கு வழமையான அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் விளையாடுவது ஓரளவு தெம்பைக் கொடுக்கும் என கருதப்படுகின்றது.
தான் முழுமையான உடற்தகுதியைக் கொண்டிருப்பதாக மெத்யூஸ் கூறுகின்றபோதிலும் பந்துவீச்சில் ஈடுபடமுடியாததால் அவர் அரை குறை உடற்தகுதியுடன் விளையாடவுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.
உபுல் தரங்கவுக்கு இரண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரோஷன் திக்வெல்லவுடன் குசல் ஜனித் பெரேரா ஆரம்ப வீரராக விளையாடவுள்ளனர்.
இந்தியாவுடனான போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவந்துள்ள திசர பெரேரா இன்றைய போட்டியில் விளையாடுவாராக இருந்தால் அவருக்கு அசேல குணரட்ன அல்லது சீக்குகே பிரசன்ன வழிவிடவேண்டிவரலாம். அத்துடன் சுரங்க லக்மாலுக்குப் பதிலாக நுவன் குலசேகர விளையாடுவதற்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகின்றது.
எது எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்காக அணி முகாமைத்துவம் நன்கு சிந்தித்து இறுதி அணியைத் தீர்மானிக்கும் என்பது உறுதி.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியாவைப் பொறுத்த மட்டில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றுவிடும். எனவே பாகிஸ் தானை திணறவைத்தது போல் இலங்கையையும் வெற்றிகொள்ள இந்தியா கடுமையாக முயற்சிக்கும்.
0 Comments