(லியோ நிரோஷ தர்ஷன்)
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களின் பதக்கங்கள் நாட்டிற்கானதாகும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அப்போது பதக்கங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற வகையில் சுதந்திக்காவிற்கு தேவையான அனைத்தையும் செய்துள்ளது. சுசந்திகா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டால் விளையாட்டுத்துறை அமைச்சு அதனை கொள்வனவு செய்யும். அதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவுக்கும் ஊடக சந்திப்பில் நேற்று புதன் கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், ‘‘விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க இணைத்துக் கொள்ளப்பட்டு அவருக்கு மாதம் 60 ஆயிரம் சம்பளமும், 15 ஆயிரம் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
இதே போன்று விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாக இருந்த முன்னைய அமைச்சர்களும் பல்வேறு வகையில் அவருக்கு பொறுப்புகளை வழங்கி அதற்கான கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் என்பன வழங்கப்பட்டது. மேலும் இராணுவம் அவருக்கு மாதம் 60 ஆயிரம் ரூபா வழங்குகின்றது.
‘‘இந்நிலையில் அரசாங்கமோ அமைச்சோ தனக்கு ஒன்றுமே செய்ய வில்லை என சுசந்திகா ஜயசிங்க கூறுவதில் உண்மையில்லை.
அதே போன்று அவருக்கு வழங்கப்படுகின்ற சம்பளமும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதிலும் எவ்விதமான உண்மையும் இல்லை.
தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கான மாத அறிக்கையை சமர்பிக்க வேண்டியது அமைச்சின் ஆலோகர் என்ற வகையில் அவரது கடமையாகும்.
‘‘அமைச்சின் ஆலோசகர் எனும்போது அவர் அரச அதிகாரியாக கருதப்படுகின்றார். ஆனால் தனது கடமைகளை செய்யாமல் அமைச்சுக்கு எதிராக போலிப் பிரசாரம் செய்வதில் எவ்வித நியாயமும் இல்லை.
தமயந்தி தர்ஷா மற்றும் சுகத் உள்ளிட்ட பலர் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளிலும், ஆசிய போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்கள் யாரும் தங்களுக்கு அரசாங்கம் ஒன்றும் செய்ய வில்லை என பொது இடத்தில் கோஷம் எழுப்ப வில்லை.
‘‘ஆனால் சுசந்திகா ஜயசிங்க இவ்வாறு கூறுகின்றமை வேதனையாக உள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்துள்ளது.
அவரை சர்வதேச போட்டிகளுக்கு தயார்ப்படுத்துவது முதல் இன்று வரை பல கோடிகளை செலவிட்டுள்ளது. எனவே எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. சுசந்திகா ஜயசிங்க ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்டால் விளையாட்டுத்துறை அமைச்சு அதனை கொள்வனவு செய்யும். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை தடுப்பதற்காக புதிய சட்டத்தின் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களின் பதக் கங்கள் நாட்டிற்கானதாகும் வகையில் அந்த சட்டம் அமையப்பெற வேண்டும். அதனூடாக பதக்கங்களை விற்பனை செய்வதை தடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
0 Comments