பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மீள்குடியேற்றத்திற்கான விஷேட நடமாடும் சேவையில் அதிகளவான முஸ்லீம் மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளனர்.
இன்று காலை 20ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் ஆரம்பமான இவ்விசேட நடமாடும் சேவையில் வெளிமாவட்டங்களில் வசிக்கும் யாழ் மாவட்ட முஸ்லீம் மக்கள் அதிகளவாக கலந்து கொண்டனர்.
இச்சேவை யாழ்ப்பாணம் சாவகச்சேரி வேலணை ஆகிய மூன்று பிரதேச செயலகப்பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடைபெறுவதுடன் யாழ் பிரதேச செயலாளர் பொ.தயானந்தன் உடனிருந்து மக்களுக்கு தேவையான சேவைகளை விரைவாக செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதில் புதிய மீள்குடியேற்றப் பதிவுகள் காணி அற்றோர் காணிகளை கோருவதற்கான பதிவுகள் வீட்டுத்திட்டத்திற்கான பதிவுகள் ஆகியவற்றுடன் வாழ்வாதார உதவிகளுக்கான பதிவுகள் யாழ் மாநகரசபை அலுவலகத்தின் சோலைவரி மதிப்பீடுகள் மற்றும் வீடமைப்பிற்கான அனுமதி தொடர்பிலான பதிவுகளும் இந்நடமாடும் சேவையில் மக்களின் சேவைகளாக அமைந்துள்ளது.
இந்த நடமாடும் சேவையை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினை அழைத்து மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.இவருடன் மற்றுமொரு மாகாண சபை உறுப்பினர் இமானுவெல் ஆனோல்ட் உடனிருந்தார்.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்த விஷேட நடமாடும் சேவையில் அதிக பயனை பெற வேண்டும் என்பதற்காக மக்கள் பணிமனை தலைவர் பி.எம்.எஸ் சுபியான் மௌலவியும் களத்தில் நின்று மக்களிற்கு தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீன் ஹாஜியாரும் மக்களுக்கு தேவையான உதவிகளை அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து செய்து வருகின்றார்.
யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் முகைதீன்,உப தலைவர் கே.எம் நிலாம்,செயலாளர் ஆர்.கே.சுவர்ஹான் ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இது தவிர தூர இடங்களில் இருந்து மீள்குடியேற்ற விசேட நடமாடும் சேவைக்கு வந்துள்ள மக்களின் தேவையை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் யாழ் மாவட்ட அமைப்பாளர் ரொசான் தமீம் தலைமையில் குளிர்பானம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நடமாடும் சேவையில் சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் நடமாடும் சேவையில் கலந்து கொண்ட மக்களுக்கு மதிய போசன ஒழுங்குகளை யாழ் முஸ்லீம் சிவில் அமைப்பினர் ஒழுங்கு செய்துள்ளனர்.
இது தவிர இச்சேவைக்கு வரும் மக்களிற்கு யாழில் ஏற்கனவே மீள்குடியேறியுள்ள மக்கள் தனிப்பட்ட முறையிலும் விருந்தோம்பல்களை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments