மதீனாவிற்கு தற்கொலை பயங்கரவாதியை அனுப்பி தாக்குதல் நடத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள் நரகத்தின் நாய்கள் என்று அசாதுதீன் ஓவாய்சி சாடிஉள்ளார்.
ஐதராபாத்தில் இஸ்லாமிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கண்டன கூட்டத்தில் கலந்துக் கொண்ட மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி பேசுகையில், ”ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் ஒரு தற்கொலை பயங்கரவாதியை மதீனாவிற்கு அனுப்பிஉள்ளது... இது ஒரு மோசடி, கிரிமினல்களின் ராணுவம்... இவர்கள் நரகத்தின் நாய்கள்,” என்று கூறிஉள்ளார். ”ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஆபத்து கிடையாது, ஒட்டுமொத்தமாக மனித குலத்திற்கே ஆபத்து,” என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாம் மார்க்கத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது; இந்த தீவிரவாதிகளை அழிப்பது முஸ்லிம்களின் பெரிய கடமையாகும் என்று குறிப்பிட்ட அசாதுதீன் ஓவாய்சி மதீனாவிற்கு தற்கொலை பயங்கரவாதியை அனுப்பி தாக்குதல் நடத்தும்படி ஏவிய ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபு பக்ர் அல் பாக்தாதியை முஸ்லிம்கள் என்றாவது ஒருநாள் பார்க்க நேர்ந்தால் அவனை ஒரு துண்டாக அல்ல, நூறு துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள் என்றும் எச்சரித்தார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் மூளைச்சலவைக்கு பலியாகி விடாதீர்கள் என முஸ்லிம் இளைஞர்களை வலியுறுத்திய அவர், இஸ்லாமுக்காக நீங்கள் வாழ வேண்டுமேத்தவிர இஸ்லாமுக்காக சாகக் கூடாது என்றார். உங்களில் படித்தவர்கள் ஏழைவீட்டு முஸ்லிம் குழந்தைகளுக்கு இலவசமாக டியூஷன் கற்றுத்தர வேண்டும். உங்களில் செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் திருமணம் நடக்க தேவையான உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்றும் ஒவைசி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது மக்காவில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இஸ்லாம் மார்க்கத்தின் சித்தாந்தத்தை அடிவேரோடு தகர்த்தெறியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இஸ்லாமுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என அந்த தீர்மானத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.


0 Comments