Subscribe Us

தெஹிவளை பாத்தியா பள்ளிவாயல் விவகாரம்; முஸ்லிம்கள் மத்தியில் வீணான பதட்ட நிலை


தெஹிவளை கல்கிஸ்ஸ பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் (DMMF) இன் செயற்பாடுகளில் தொடர்புள்ளவன் என்ற வகையில் உங்கள் கவனத்திற்கான ஒரு குறிப்பு:
தெஹிவளை பாத்திய மாவத்தை பள்ளிவாயல் விஸ்தரிப்பு விவகாரம் இப்போது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் இதற்கான இணக்கபூர்வ தீர்வொன்றை பெற்றுத்தருவதாக பிரதமர் தரப்பு உறுதியளித்துள்ளது.
பள்ளிவாயல் விஸ்தரிப்பில் இன்னும் நிறைவடைய வேண்டிய நிர்மாண வேலைகள் குறைந்த அளவே காணப்படுகின்றன. இந்த விடயத்தை மிகவும் கவனமாக கையாளவேண்டிய தேவையிருக்கிறது. இது பற்றி செய்தி வெளியிடுகிற ஊடகங்கள் உணர்ச்சியை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஊதிப்பெருப்பித்த தகவல்களை வழங்குவதனால் முஸ்லிம்கள் மத்தியில் வீணான பதட்ட நிலை ஏற்படுத்தப்படுகிறது.
அத்தோடு இணைய செய்திகளை மாத்திரம் மேற்கோளாக வைத்து முகநூலில் எழுதப்படும் பதிவுகளாலும் ஒரு வித மிகத்தீவிர ஆபத்து நிலையொன்று தோற்றுவிக்கப்படுகிறது. இதனை வைத்து விடயமறியாத பெரும்பான்மை இனத்தவரும் தீவிர எதிர்வினையாற்றுவர்.
ஈற்றில் நோன்பு மாதத்தில் வழமைபோன்று தருணம் பார்த்திருக்கும் இனவாதிகளின் வஞ்சம் தீர்க்கும் கைங்கரியங்களுக்கு எண்ணெய் ஊற்றி பிரச்சினை பூதாகரமாக எரிந்துவிடும்!
பாத்திய மாவத்தை பள்ளி வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டது, விஸ்தரிப்பிற்கான சட்ட பூர்வ வரை படம் மாநகர சபையின் அங்கீகாரம் பெற்றது. ஆதலால் தடைகள் தொடர்ந்தால் சட்டரீதியாக அதனை எதிர்கொள்ள திறண் மிக்க சட்டத்தரணிகள் தயாராக உள்ளனர்.
ஆகவே முஸ்லிம் தரப்பில் செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்கள் மிகுந்த கவனத்தோடு செயற்பட வேண்டிய தருணமிது.
இணைய ஊடகங்களின் நிதானமான செயற்பாடே இந்த பிரச்சினையின் தீர்வு தொடர்பில் அவர்கள் ஆற்றுகிற பேருதவியாக அமையும்.

Post a Comment

0 Comments