இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தமும் அதன் மூலமான உயிரிழப்புகள் மற்றும் உடமையிழப்புகள் ஆகியன பற்றியும் நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்தததே.. அவசர கால நிலமையில் ஒரு அரசாங்கம் செய்யவேண்டிய வேலைகளையும், செயற்றிட்டங்களையும், முன்னெடுப்புக்களையும், உதவிகளையும் விட பன்மடங்கு அதிகமான சேவைகளையும் உதவிகளையும் நாட்டு மக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் செய்திருந்தார்கள், செய்து கொண்டுமிருக்கிறார்கள் என்றால் அது பொய்யில்லை. இதற்கு மூலகாரணம் முகநூல்.. நாட்டில் உள்ள ஊடகங்கள் ஆற்றவேண்டிய கடமைகளை முகநூல் ஆற்றியிருந்தது.
ஒவ்வொருவரும் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இணைந்து தங்களின் சக்திக்குற்பட்ட வகையில் உதவிகளை செய்திருந்தார்கள் அந்த உதவிகள் பல்வேறு வகையானதாக இருக்கின்றது இவர்களின் எந்தவொரு உதவியையும் எவரொருவரும் குறைத்து மதிப்பிட்டு தட்டிக்கழித்துவிட முடியாது..
இவ்வாறு உதவிபுரிந்த சகோதர்களுள் குறிப்பட்டு சொல்ல வேண்டிய சிலர் கையடக்க தொலைபேசிகளுக்கு மீள்நிரப்பு செய்யும் உதவியை கூட செய்திருந்தார்கள் அதாவது வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டவர்கள் மீட்பு குழுவினரை தொடர்பு கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் அவர்களின் தொலைபேசியில் போதுமான அளவு நிலுவை இல்லாத நேரம் குறிப்பிட்ட சகோதர்ரகளுக்கு ஹெல்ப் என டைப் செய்து குறுந்தகவல் அனுப்பும்போது குறிப்பிட்ட இலக்கத்திற்கு அந்த சகோதரர்கள் ஒரு தொகையை மீள்நிரப்பு செய்துவிடுவார்கள். இந்த உதவியை அவர்கள் செய்தது இம்மையில் கிடைக்க கூடிய அந்த முகஸ்துதியையோ பாராட்டையோ எதிர்பார்த்தல்ல மாறாக இறைவனின் அன்பையும் பொருத்தத்தையும் எதிர்பார்த்தே..
மனிதன் மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றே இந்த மீள்நிரப்பு உதவியும் மீள் நிரப்பு செய்த தொகைகள் அவர்களுக்கு திருப்பி கிடைக்கபோவதல்ல அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை தங்களின் சொந்த பைகளில் இருந்தே அவர்கள் அதை செய்திருக்கிறார்கள்.. ஆனால் இந்த உதவியை கூட எமது சமூகத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் என்று சொல்லக்கூடிய எமது சகோதரர்கள் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்.. ஒன்றல்ல இரண்டல்ல அறுபத்தைந்து பேர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள்.. அத்தனைபேரும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்..
வெள்ள நீரின் கோர பிடிக்குள் சிக்குண்டு வெளியேற முடயாமல் இருக்கும் உறவுகள் தொலைபேசி மீள் நிரப்பு உதவிகளுக்கு இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள் என முக நூலில் அவர் மனிதாபிமானத்துடன் இட்ட பதிவை பார்த்துவிட்டு அந்த இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பி மீள் நிரப்பு செய்ய கோரியிருக்கிறார்கள்.. சகோதரரும் நம்பி மீள் நிரப்பு செய்திருக்கிறார்..
மீள் நிரப்பு செய்யும்படி ஒரே இலக்கத்தில் இருந்து இரண்டு தடவைகள் குறுஞ்செய்தி வந்தததையடுத்து அந்த இலக்கத்திற்கு அழைப்பை எடுத்து விசாரித்ததில் அது சம்மாந்துறை பிரதேச இலக்கம் அதன் பிறகு அவர் மீள்நிரப்பு செய்த அத்தனை இலக்கங்களையும் தொடர்பு கொண்டபோது அறுபத்தைந்து இலக்கங்கள் சம்மாந்துறை, சாய்ந்தமருது, ஒலுவில், அக்கறைப்பற்று, அம்பாறை, போன்ற இடங்களில் இருப்பவை.. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசம் எங்கே ? அம்பாறை மாவட்டம் எங்கே ? எதற்கு இந்த ஈனத்தனமான பிழைப்பு ? இப்படி மீள் நிரப்பு வசதியை துஷ்பிரயோகம் செய்த நபர்களுள் சிலர் மார்க்கம் கற்ற அறிவாளிகள் என்பது அதிர்ச்சியான விடயம்.
கடந்த சுனாமி காலத்தின் போது நீரில் மிதந்து வந்த சடலங்களில் இருந்து ஆபரணங்களை கொள்ளயடித்தது ஒரு கும்பல் அந்த ஈனத்தனமான செயலுக்கும் இந்த செயலுக்கும் அதிக வித்தியாசத்தை என்னால் காண முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்படும் உதவியே இது அல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் நமக்கு உரிய உதவி இல்லை இது என்று குறிப்பிட்ட அறுபத்தைந்து நபர்களால் பிரித்தறிந்து உணர முடியாமல் போனது ஏன் ? அத்தனை தொலைபேசி இலக்கங்களும் கைவசம் இருக்கின்றது மீள் நிரப்பு செய்ததற்கான ஆதாரம் இருக்கின்றது.. அவைகள் அனைத்தும் தேவைப்பட்டால் பகிரங்கமாக பதிவிடப்படும்..
இவ்வாறு சமூகத்திற்குள் ஏமாற்று பேர்வழிகள் நிறைந்து காணப்பட்டால் எப்படி உதவிக்கரம் நீட்ட எண்ணம் வரும்.. சிறிய ஒரு தொகையில் ஏன் இந்த ஏமாற்று பிழைப்பு இந்த தொகையை கொண்டு எத்தனை வருடத்துக்கு உங்கள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள போகிறீர்கள் ? ஹராத்தை உங்கள் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டீர்கள்.. ஹராம் என்று நன்கு தெரிந்தும் கூட அதை உபயோகப்படுத்திக்கொண்டீர்கள். இறைவனிடம் எப்படி மன்னிப்பு கோரப்போகிறீர்கள்..
மீள்நிரப்பு உதவியை செய்ய முன்வந்த அந்த சகோதரன் இழந்தது கொஞ்சமாக இருக்கலாம் ஆனால் அவரின் நம்பிக்கையில் நீங்கள் நெருப்பை வைத்து விட்டீர்கள்.. இஸ்லாமியன் செய்ய கூடாத ஒருவேலையை செய்து விட்டர்கள் இனியும் எவ்வாறு நம்புவது.. சில நபர்களின் ஈனச்செயலினால் பல பேருக்கான உதவிகள் வலுவிழந்து போக கூடும்..
சகோதர்ரகளே எச்சரிக்கையாக இருங்கள் உதவிகளை செய்யும் போது உதவிகள் சரியானவர்களை சென்றடைய வேண்டும் அப்போதுதான் அதில் அர்த்தம் உள்ளது.
-Razana Manaf-
0 Comments