Subscribe Us

வெட்கம் துறந்த பல்கலைக்கழக பகடிவதை| ஒரு திறந்த மடல்


பல்கலைக்கழகங்களில் பகடிவதை, புதிதல்ல. அதே போல இலங்கை முஸ்லிம் சமுதாயத்தை பொறுத்த அளவில், ஒரு குறைந்த சனத்தொகை முஸ்லிம்கள் தான் பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர் என்ற தெளிவும் எங்களுக்கு புதிதல்ல. 

எது எவ்வாறாயினும் பகடிவதைகளின் போது முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எவ்வாறான கட்டுக் கோப்புகளுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய அறிவுரைகள் வழங்குவதில் பெற்றோர்களும், இவர்கள் எப்படிப் பட்ட அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர் என்ற தேடலில் உலமாக்களும் பங்களிப்பு  வழங்கியிருந்தாலும் அவை யாவும் பலன் தரவில்லை என்பது கவலைக்குரிய கசப்பான உண்மையாக இருந்து கொண்டு இருக்கின்றது. 

நேரடியாக விடயத்திற்கு வருகின்றேன். கடந்த சில நாட்களுக்கு முன்னால் South Easters University இல் ஒரு குறித்த பீடத்திற்கு புதிய மாணவ மாணவிகள் உள்வாங்கப் பட்டுள்ளனர். முஸ்லிம் சனத்தொகை கூடுதலாக உள்ள இந்த பல்கலைக்கழகத்தில், வழங்கப் பட்டுக்கொண்டிருக்கும் பகடிவதைகளில் ஒன்று, குடை இன்றி பல்கலைக்கழகத்திற்குள் சமுகம் தருவது ! 

இந்த நாட்களின் காலநிலையை கருத்திற் கொண்டு, அரசாங்கமே மாணவ  மாணவிகளின் நன்மை கருதி, இடைவேளையை கூட்டுவதிலும், பாட நேரங்களை குறைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது, மனிதாபிமானம் இன்றி இளம் யுவதிகளையும், இளைஞர்களையும் இவ்வாறு குடைகள் இன்றி, கிழக்கு மாகாண வெப்பத்தில் அலைய விடுவது, படித்த முட்டாள்களின் அறிவீனச் செயலோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. 
 
சில முக்கிய விடயங்களை அடுத்து உங்களுடன் பகிர்கின்றேன், தயவு செய்து இந்த விடயத்தை உரிய அதிகாரிகள் மூலம் கட்டுப்படுத்த முன் வருமாறும் , உங்கள் பங்களிப்பை இயன்ற அளவில் வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
 
பகடி வதை செய்வது பல்கலைக் கழக கலாச்சாரமாக இருந்தாலும், முஸ்லிம்கள் என்ற ரீதியில் எங்களுக்குள்ள தனித்துவத்தை பேணி, மார்க்கத்தில் விலக்கப்பட்ட விடயங்களில் இருந்து விலகி நடக்கும் அறிவு இந்த மாணவ சமுதாயத்திற்கு ஏன் இன்னும் எட்டவில்லை ??
 
பல பல்கலைக்கழகங்கலில்  முஸ்லிம் மாணவர்களுக்கு மத்தியில்  நடைபெறும் சைத்தானிய பகடிவதைகள் சிலவற்றை பட்டியல் படுத்துகின்றேன் … 

“அவர்கள் பல்லிப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய எதிர்மறையான எதிர்வுகூறலை, மெய்ப்பிக்கும் கூட்டத்தில் இவர்களும் அடங்குகின்றனரோ என்று கூட கேள்விகள் எழுகின்றன ! 
 
Super Seniors மற்றும் Seniors புதிய மாணவர்களின் கைத்தொலைபேசிகளில் கண்ட நேரம் தொடர்பு கொண்டு பேசுவார்களாம். ஆண் பெண் வித்தியாசம் மீறி, முஸ்லிம்களில் மஹ்ரம் பற்றிய வரையரை மீறி,  ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் தொலைபேசியில் பகடிவதை பண்ணுவது எத்தனை சமூகத் தலைமைகளுக்கு தெரியும் ?? எத்தனை பெற்றோருக்கு தெரியும் ?
 
“அஸ்ஸலாமு அழைக்கும் நானா”
“அஸ்ஸலாமு அழைக்கும்” தாத்தா என்று  Junior சொல்ல வேண்டுமாம் 
அவ்வாறு சொல்லா விட்டால் SENIOR கு கோபம் வருமாம் 
ஸலாத்திற்கு senior சொல்லும் பதில் என்ன தேயுமா? 
“போடா”  அல்லது “போடி “
 
சலாம் என்பது இஸ்லாத்தின் சொத்து. இதை எதிர்கால முஸ்லிம் தலைவர்கள், இன்று இவ்வாறு கொச்சைப் படுத்திக்கொண்டு அலைவது எத்தனை உலமாக்களுக்கு தெரியும் ?
 
Seniors, juniors ஐ  மதினி என்று கூப்பிடுவாராம் அதற்கு “என்ன மச்சான்?” என்று Juniors கேட்க வேண்டுமாம் .

அப்படிக் கேட்கவில்லை என்றால், இங்கே எழுத இயலாத துர் வார்த்தைகளால்  Seniors , juniors இற்கு பதில் தருவார்களாம். 
 
சினிமா பாடல் கைத்தொலைபேசியில் போடப் பட்டு, அதற்கு முஸ்லிம் பெண்கள், முஸ்லிம் ஆண்களுக்கு மத்தியில் Lip sync பண்ணி பாட வேண்டுமாம். 
 
பெண்களை ஜமாத்தாக தொழ வைத்து கண்காணிப்பார்களாம் Seniors. தொழ முடியாத யுவதிகள் இருந்தால், அவர்கள் ஏன் தொழவில்லை என்ற காரணத்தை வெளிப்படையாக எல்லோர் முன்னாலும் சொல்ல வேண்டுமாம். இப்படி சொல்லா விட்டால்,  “இதை சொல்ல முடியாவிட்டால் எதற்க்காக Medicine படிக்க வருகிறாய்?” என்று முஸ்லிம் இளைஞர்களே எம் யுவதிகளிடம் வினாத் தொடுப்பார்களாம். 
 
இது பிறிதொரு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட பகடி வதை. இது எத்தனை பேருக்கு தெரியும்? இவ்வாறு  இவர்களின் சைத்தானிய கூத்துக்களை பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம். ஆனால் அதுவல்ல நான் எழுதும் இந்த பதிவின் நோக்கம்,
 
தயவு செய்து இலங்கை வாழ் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவ மாணவியர்களுக்கு அவர்களின் வரையறை பற்றிய இஸ்லாமிய விளக்கத்தை கொடுக்க  பள்ளிவாசல்கள் தொடங்கி,  ஜமிய்யதுல் உலமா வரை உள்ள அனைத்து தரப்பினரும் முன் வர வேண்டும் என நான் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இது உரிய நேரத்தில் கவனிக்கப் படத் தவறினால், ஹயாவை (வெட்க உணர்வு) இழந்த ஒரு படித்த (?) சமுதாயத்தை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் ஐயம் இல்லை. 
 
ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் நான் எனது கடமையை செய்து விட்டேன். தயவு செய்து பேச்சாளர்களும், மிம்பர் மேடைகளும், உலமாக்களும், இளைஞர் சங்கங்களும் இந்த விடயத்திற்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்ற கோரிக்கையுடன், உங்கள் முயற்சிகள் வெற்றி பெற என்றென்றும் துஆக்களுடன் இந்த திறந்த மடலை முடித்துக் கொள்கின்றேன். 
அன்புடன் 

Faaraa

Post a Comment

0 Comments