மத்திய கிழக்கு எதிர் நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் “2030 பொருளாதார திட்டம்” எனும் பெயரில் சவுதி அரேபியாவின் பொருளாதார கொள்கையில் அதிரடியாக பாரிய சீர் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சவுதி செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் அடைய எதிர்பார்க்கப் படும் மேற்படி பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பான சீர்திருத்த திட்டத்தினை, சவுதி அரேபியா கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபிய பொருளாதாரம் வெறுமனே மசகு எண்ணெய் ஏற்றுமதியில் மாத்திரம் தங்கியிருக்கின்ற நிலையை குறைப்பதே, முன்வைக்கப்பட்டுள்ள புதிய சீர்திருத்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
சவுதி பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவரான இரண்டாம் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் முன்மொழிந்த இந்த திட்டத்தில் சமூக, பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் பரந்த அளவில் சேர்க்கப் பட்டுள்ளன.
குறித்த சீர்திருத்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைவதற்கு, அரசாங்கத்துடன் இணைந்து நாட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அரசாங்கம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது ஆட்சிமுறையை மேம்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் பல துறைகளின் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கு ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்கத்தின் குறிக்கோளையும், நாடு கலாசார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையை அளிப்பதாவும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.
0 Comments