Subscribe Us

header ads

மட்டக்களப்பில் பந்தாடப்படும் பிரதேச செயலாளர்கள்! அரசாங்க அதிபர் பொறுப்பு கூறுவாரா?

மட்டக்களப்பில் இடமாற்றம் என்ற பெயரில் பிரதேச செயலாளர்களை அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இணைந்து பந்தாடுவதாக மாவட்ட புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அரச நிர்வாகங்களில் கடந்த மகிந்த ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இன்னும் நீங்கியதாக இல்லை.
அண்மையில் மட்டக்களப்பில் மகிந்த ராஜபக்ச ஆட்சியே நடைபெறுகிறது என ஊடகங்கள் வாயிலாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்தும் அங்கு நடைபெறுகின்ற சம்பவங்கள் அனைத்தும் அதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேசத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை நோக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசநிர்வாகத்தின் ஆழுமையற்ற தன்மை மற்றும் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் போன்றவற்றை கண்ணூடாக காணக்கூடியதாகவுள்ளது.
பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் நான்கு பிரதேச செயலாளர்கள் இடமாற்ற பெற்றுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய வாசுகி அருள்ராசா இடமாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர் கடந்த நான்கு வருடங்களில் இந்த பிரதேச செயலகத்திற்கு நான்கு பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டு பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருமதி. வாசுகி அருள்ராசா இடமாற்றம் பெற்றுச் சென்றதை தொடர்ந்து வ.தவராசா அவர்கள் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு ஒரு மாதகாலம் கடமையாற்றிய நிலையில் இடம் மாற்றப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து நியமிக்கப்பட்ட திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்கள் மூன்று வருடங்கள் கடமையாற்றியிருந்த நிலையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு திருமதி.சந்தியானந்தி நமசிவாயம் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர்கடந்த பத்து மாதங்கள் கடமையாற்றியிருந்த நிலையில் திடீரென இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய பிரதேச செயலாளராக வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக்கொண்டிருந்த திருமதி.தெட்சணகௌரி தினேஸ் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரின் இடமாற்றம் நடைபெற்று இன்று ஓரிரு வாரங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் இவரை தனது பழைய பிரதேச செயலகத்திற்கு செல்லுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றச் சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களை அரசியல்வாதிகளும் அரசாங்க உயர் அதிகாரிகளும் சேர்ந்து எந்தளவுக்கு பந்தாடமுடியுமோ அந்தளவுக்கு பந்தாடுகின்றார்கள் என்பதையே வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
பொறுப்புக் கூறவேண்டிய அரசாங்க அதிபர்!
மட்டக்களப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அல்லது நடக்கவிருக்கும் இடமாற்றங்களுக்கெல்லாம் நிர்வாக ரீதியாக பொறுப்புக் கூறவேண்டியவராக மாவட்ட அரசாங்க அதிபரே உள்ளார்.
அல்லது மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியாமல் அல்லது மாவட்ட அரசாங்க அதிபரின் ஆதரவு இல்லாமல் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களை அரசியல்வாதிகளினால் இடமாற்றம் செய்யமுடியாது என்றவகையில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கான மேற்படி இடமாற்றங்கள் தொடர்பான உண்மைத்தன்மையை தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு அரசாங்க அதிபருக்கு உண்டு.
இவ்வாறான நிலையில் பட்டிப்பளை பிரதேச செயலகத்திலும் ஏனைய பிரதேச செயலகங்களிலும் நடைபெற்ற நடைபெற இருக்கின்ற இடமாற்றங்கள் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்ன காரணத்திற்காக செய்யப்பட்டது என்ற உண்மைகளை மக்களுக்கு சொல்லவேண்டிய பொறுப்பு அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் அம்மையாரையே சார்ந்துள்ளது.
மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்றவகையில் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியை தான் கடமையாற்றும் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தவேண்டியது அவருக்கான பாரியபொறுப்பாகும்.
மகிந்தராஜபக்சவின் ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் உச்சகட்டத்தை அடைந்திருந்தது.
அந்த காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட முஸ்லீம் அமைச்சர்களின் ஆதிக்கத்தில் மட்டக்களப்பு மாவட்டம் இருந்தது.
இவர்களின் சொல்லை மீறி அரசாங்க அதிபரினால் ஒரு அடிகூட நகரமுடியாமல் இருந்தது என்பது ஜதார்த்தம்.
ஆனால் இன்றும் மாவட்டத்தில் அவ்வாறானதொரு நிலை உள்ளதா என்பதை அரசாங்க அதிபர் அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மக்களுக்காக சேவையாற்றவந்த பிரதேச செயலாளர்களுக்கு தலமைதாங்கும் அரசாங்க அதிபர் என்றவகையில் தனக்கு கீழே உள்ள பிரதேச செயலாளர்களை அரசியல்வாதிகள் தங்களது சோந்த காரணத்திற்காக இடமாற்றம் என்ற பெயரில் பந்தாடுவதற்கு எந்தவகையில் அனுமதி வழங்க முடியும்?
ஒரு பிரதேச செயலாளரின் அல்லது அரசாங்க அதிகாரியின் இடமாற்றம் என்பது அரச நிர்வாக கட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறவேண்டும்.
ஒரு பிரதேச செயலாளர் அவர் கடமையாற்றும் பிரதேசத்தில் இருந்து திடீரென இடமாற்றம் பெற்றுச்செல்வதாக இருந்தால் அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கவேண்டும்.
வெறுமனே ஒரு அரசியல்வாதி சொல்கிறார் என்பதற்காக எந்தவித நியாயமான காரணமும் இல்லாது ஒரு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்வதற்கு நீங்கள் எப்படி அனுமதிக்கின்றீர்கள்?
இந்த நல்லாட்சி அரசாங்கத்திலாவது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தனது மௌனத்தை கலைக்கவேண்டும். மாவட்டத்தின் நிர்வாகத்தை கொண்டு நடத்துவதில் அரசாங்க அதிபருக்கு சிக்கல்கள் உண்டா?
குறிப்பாக அரசியல்வாதிகளின் அழுத்தங்கள் அவருக்கு உள்ளதா? மாவட்டத்தில் நடைபெறுகின்ற இடமாற்றங்கள் அனைத்தும் அரசாங்க அதிபரின் நிர்வாக முடிவுகளுக்கு ஏற்பவே நடைபெறுகின்றதா?
அல்லது அரசியல்வாதிகள் அரசாங்க அதிபருக்கு அழுத்தம் கொடுத்து கட்டாயப்படுத்தி இடமாற்றங்களை செய்ய தூண்டுகின்றார்களா?
அல்லது அரசாங்க அதிபர் தங்களது நிர்வாக அமைச்சில் இருந்து வருகின்ற கட்டளைகளுக்கு அமையவே இந்த இடம்மாற்றங்களுக்கு அனுமதி வழங்குகின்றாரா?
அல்லது அரசாங்க அதிபருக்கு தெரியாமலே நேரடியாக அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இதுபோன்ற இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றதா?
என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது பொறுப்பும் கடமையும் மாவட்ட அரசாங்க அதிபரையே சார்ந்துள்ளது.
இன்று மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடமாற்றம் மற்றும் அரசியல் வாதிகளின் பழிவாங்கள்கள் காரணமாக அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் இடையிலான விரிசல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
அரசியல்வாதிகளினால் பிரதேச செயலாளர் ஒருவர் இடமாற்றம் அல்லது நிர்வாக அதிகாரங்களின் ஊடாக பழிவாங்கப்படும் போது அதற்கு துணையாக அரசாங்க அதிபர் இருக்கின்றார்.
அல்லது அதனை அரசாங்க அதிபர் தடுக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுக்களை பிரதேச செயலாளர்கள் அரசாங்க அதிபர் மேல் முன்வைக்கின்றார்கள்.
“எங்களை காப்பாற்றவேண்டிய அரசாங்க அதிபர் எங்களை அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்காக பழிக்கடாவாக்குகின்றார்” என்று பல பிரதேச செயலாளர்கள் தங்களது ஆதங்கங்களை தெரிவித்துள்ளார்கள்.
இதைவிட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யவேண்டுமென்ற கருத்துக்களும் தற்போது மட்டக்களப்பில் மேலோங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்க அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றிற்காக அரசியல் வாதி ஒருவரின் பெயரில் துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டு இருந்ததுடன் அதனை தடுப்பதற்காக அரசாங்க அதிபர் நீதிமன்றத்தின் ஊடாக பாதுகாப்பு கோரியிருந்த நிலையில் அந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்யக்கூடாது என மாவட்டத்தின் பிரதி அமைச்சரான அமீரலி அவர்கள் பாராளுமன்றத்தில் மிகக்கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தார்.
இதைவிட மட்டக்களப்பில் மகிந்த ஆட்சி நடைபெறுவதாகவும் அதற்கு அரசாங்க அதிபரும் ஒரு காரணமென கூறி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்ததுடன் அதற்கு தனது மறுப்பையும் அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.
இதைநேரம் அரசாங்க அதிபரின் இடமாற்றம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்டக்கிளை முக்கிய சில முடிவுகளை எடுத்துள்ளதாகவும் குறித்த முடிவுகள் அடங்கிய கடிதம் ஒன்று மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய சம்பந்தன் ஐயா ஊடாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்நிலையில் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்றவகையில் உங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அல்லது வீன் பழிச்சொற்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அரசாங்க அதிபரின் கடமையாகவுள்ளது.
மாவட்டத்தின் நிர்வாகம் குறித்தும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற திடீர் இடமாற்றங்கள் குறித்தும் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளின் அதிகாரத் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் குறித்தும் வாய்திறக்கவேண்டிய கடைசி தருணமாகவே இந்த காலகட்டத்தை பார்க்கவேண்டியுள்ளது.
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் ஊடாக பாதிக்கப்பட்ட மாவட்டம் என்றவகையில் இலங்கையில் மிகவும் வறுமையான மாவட்டமாக கருதப்படும் மட்டக்களப்பு மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் நிர்வாக சீரழிவுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் என்பன குறித்தும் அதனால் மட்டக்களப்பு தமிழ் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையை உணர்ந்த அம்மையார் என்றவகையில் இங்குள்ள தமிழ் இனத்தின் விடிவுக்காக இனியாவது மாவட்டத்தின் அரசநிர்வாகத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அந்த அரசியல்வாதிகள் யார்? என்ற உண்மையை உலகிற்குச் சொல்லுங்கள்
இல்லையென்றால் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களை இடமாற்றம் என்ற பெயரில் ஏன் பந்தாடப்படுகின்றார்கள் என்பதற்கான காரணத்தை சொல்லுங்கள் இல்லையெனில் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்றவகையில் இவை அனைத்திற்குமான முழுமையான பழிச்சொல் எதிர்காலத்தில் உங்களையும் உங்களது நிர்வாகத்தையுமே சாரும் என்பதே திண்ணம்.
தீரன்

Post a Comment

0 Comments