அபு அலா –
கடந்த 30 ஆண்டுகாலமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் சுகாதார தேவையை முதலில் விருத்தி செய்யவேண்டிய அத்தியவசியம் எனக்குள்ளது என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய ஆயுள்வேத மருந்தக திறப்பு விழா கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர் ஆர்.சிஸ்ரீதர் தலைமையில் நேற்று (23) இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இற்றைவரைக்கும் அவர்கள் மிகச் சரியான வைத்திய சேவைகளை பெறவில்லை என்றுதான் நான் கூறுவேன். அந்த மக்களுக்கு உரிய நேரத்தில் தங்களின் காலடியில் சரியான வைத்திய சேவைகளை வழங்குவதற்கு சகல முன்னெடுப்புக்களையும் முன்னெடுத்து வருகின்றேன்.
அதன் முதற்கட்டமாக வந்தாறுமூலை கிராம மக்களுக்கென ரூபா 50 இலட்சம் செலவில் மத்திய ஆயுள்வேத மருந்தகம் ஒன்றை நிர்மாணித்து இக்கிராம மக்களுக்கு ஆயுள்வேத வைத்திய சேவையினை அவர்களின் காலடியில் வழங்குவதற்காக வைத்தியர்களையும், ஊழியர்களையும் நியமித்து மருந்து மாத்திரைகளையும் வழங்கியுள்ளோம்.
இந்த கட்டிட்டம் 50 இலட்சமாக இருந்தாலும் இங்கு மேற்கொள்ளயிருக்கும் வைத்திய சேவையின் பெறுமதியை யாராலும் கணிப்பிடமுடியாது. இன்று மனிதனை ஆட்டிப்படைக்கின்றவைகளில் ஒன்றுதான் தனக்குள் இருக்கும் நோயாகும். இந்த நோய்களை கண்டுபிடிக்க வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் செய்யும் வைத்திய சேவைக்கு நிகரே இல்லை.
மக்களின் சுகாதாரமே எனது தேவையாகும். இச்சேவையை மக்களுக்கு வழங்க நான் யாரிடமாவது சென்று சுகாதார சேவையை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் பிராந்திய பணிப்பாளர் உள்ளிட்ட பல அரச உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.




0 Comments