Subscribe Us

header ads

அகதி தாயார் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டியுள்ளார்

ஜேர்மன் நாட்டில் குடியேறியுள்ள அகதி தாயார் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டியதற்கான உருக்கமான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

ஈராக் நாட்டை சேர்ந்த Hind Almahdawi (22) என்ற இஸ்லாமிய பெண் ஒருவர் தன்னுடயை கணவர் மற்றும் 4 வயது மகனுடன் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி நாட்டிற்குள் குடியேற முடிவு செய்துள்ளனர்.

அதேசமயம், அவர் ஏற்கனவே 9 மாதம் கர்ப்பமாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய அவர்களது பயணம், தரை வழியாக மற்றும் கடல் வழியாக 18 நாட்களாக பயணம் செய்து ஜேர்மனியின் ஹேனோவர் நகருக்கு அக்டோபர் 4ம் திகதி வந்து சேர்ந்துள்ளனர்.

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஜேர்மனியை அடைந்தவுடன் பெண் குழந்தை பிறந்துள்ளதால், அந்த குழந்தைக்கு ஜேர்மன் குடிமகள் என்ற அந்தஸ்தும் கிடைத்ததை எண்ணி பெற்றோர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த நேரத்தில் தான், பெண்ணின் கணவரான Ali Adnan(35) என்பவர், ‘சிரியா மற்றும் ஈராக் நாடுகளை விட்டு லட்சக்கணக்கான அகதிகள் வெளியேறி ஜேர்மனியில் குடியேறி வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல், உயிர் பயத்தோடு வந்த நமது குடும்பத்தையும் ஜேர்மன் நாடு தான் ஆதரித்துள்ளது. இதற்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் நல்ல எண்ணம் தான் காரணம்.

எனவே, நமது குழந்தைக்கு ‘ஏஞ்சலா’ என்ற பெயர் சூட்டலாமே?’ என மனைவியிடம் கோரியுள்ளார்.

கணவனின் எண்ணத்தை அறிந்த மனைவியும் அதற்கு சம்மதம் தெரிவித்து குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் முதல் பெயரான ‘ஏஞ்சலா’வை சூட்டியுள்ளனர்.

இது குறித்து தாயார் பேசுகையில், ‘என்னுடைய கணவர் ஈராக் ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். ஆனால், ஒருநாள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

அதில், ‘உடனடியாக ராணுவத்திலிருந்து விலகி தங்களுடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர வேண்டும்.

இல்லையென்றால், உன்னையும், உன்னுடைய மகனையும், கர்ப்பிணி மனைவியையும் கொன்று விடுவோம்’ என மிரட்டியுள்ளனர்.

எனது 4 வயது மகனிற்கு ஏற்கனவே இதய நோய்  இருப்பதால், அவனுக்கு மேல் சிகிச்சை அளிக்க நினைத்திருந்தோம். அந்த வேளையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மிரட்டல் கடிதம் எங்கள் குடும்பத்தையே நிலைகுலைய வைத்தது.

என்னுடைய மகனையும், வயிற்றில் இருக்கும் குழந்தையும் பாதுகாக்கதான் தற்போது ஜேர்மனி நாட்டிற்குள் அகதிகளாக வந்துள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கடுமையான துயரங்களுக்கு மத்தியில் வந்த எங்களை ஜேர்மனி நாடு அன்போடு வரவேற்றது. இந்த உதவியை நாங்கள் உயிர் உள்ள வரை மறக்க மாட்டோம்.

எங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் நன்றியை ஜேர்மன் சான்சலருக்கு செலுத்துவதற்கு தான் தற்போது தங்களுடைய குழந்தைக்கு சான்சலரின் பெயரை சூட்டியுள்ளதாக’’ தாயார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தங்களது குடும்பத்திற்கு புகலிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ள அவர்கள் ஹேனோவர் நகருக்கு வெளியே உள்ள Sarstedt என்ற பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தற்போது வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments