Subscribe Us

header ads

கற்பிட்டியின் குரல் 'நான்' பகுதியில் "கவினெழி” பாத்திமா சில்மியாவுடன் ஓர் நேர்காணல்.


நவீனப் பெண்ணியக் குரலின் அடையாளமாகத் திகழ்கிறவர் "கவினெழி” பாத்திமா சில்மியா தன் அனுபவங்களை அழகியல் ததும்ப கவிதைகளாக மொழி பெயர்த்துவரும் இலக்கிய நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.  

அது மட்டுமல்லாமல் இந்திய மற்றும் பத்திரிகை, வானொலி, இணையதளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான எழுத்தாளரை. கற்பிட்டியின் குரல் நான் பகுதியின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில் இலங்கை புத்தளத்தைச் சேர்ந்த ”கவினெழி” பாத்திமா சில்மியா வுடன் ஒரு சிறப்பான சந்திப்பும் நேர்காணலும். 


கேள்வி : உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள் ?

பெயர் ஊர் படிப்பு வேலை )

பதில்  : பாத்திமா சில்மியா,  புத்தளம்,  கா.பொ.தா.(உ/த) படித்து விட்டு  புதிய வெளிச்சம் செய்திப் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றி வருகிறேன்.

கேள்வி :  எழுத்துக்கும் உங்களுக்குமான உறவு, நீங்கள் கவிதை எழுதத் தொடங்கிய சூழல்?


பதில்  : எழுத்துமேல் எழுந்த ஆர்வம்,  சூழலில் கண்ட மனதை பாதித்த நிகழ்வுகள், வேதனைகள்,  எல்லாம் கூட்டுச் சேர்ந்து எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் விதைத்தது.  இதுவே உறவும் சூழலும் ஆகும்.

கேள்வி :  உங்களுக்குப் பாராட்டு தேடித்தந்த முதல் கவிதை எது?


பதில்  : நிறைய உண்டு.  அதிலும் காதலும் கத்தரிக்காயும் என்ற கவிதை குறிப்பிடத்தக்கது.

கேள்வி :  உங்களுக்கு கிடைத்த பட்டங்கள் விருது, குறித்து?


பதில்  : தடாகம் கலை கலாச்சார இலக்கிய வட்டம் வழங்கிய 'கவினெழி" மற்றும்  பிரதேசம்,  மாவட்டம்,   மாகாணம் உலகளாவிய ரீதியில் பல போட்டிகளில் பங்குபற்றி பல விருதுகளையும் பெற்றுள்ளேன்.

கேள்வி :  உங்கள் எழுத்துக்கு வீட்டில் தடைகள் ஏதும் உண்டா?


பதில்  : அப்படி ஏதும் தடைகள் இல்லை.

கேள்வி : நீங்கள் எழுதிய முதல் கவிதை ஞாபகம் இருக்கிறதா?

பதில் :   ஆம் இருக்கிறது.


எத்தனை எத்தனை
      எண்ணங்கள்
      ஏணிப்படிகளாய்
      உயர்ந்துக் கிடந்தன
அத்தனையும்
பூகம்பத்தில்
புரண்டுப் போனதால்
புண்ணாய் போயிற்று
அடிமேல் அடிவாங்கி
ஏற்றம் காண
கட்டிய கோட்டைகள்
இடி விழுந்ததாய்
இடிந்துப் போயிற்று
பட்டாம் பூச்சி கனவுகள்
பட்டமரமாய்
பசுமை நினைவுகள்
பாலைவனமாய்
நம்பிக்கை நகர்வுகள்
நடை பிணமாய்
கண்ட கனவுகள்
காணாமல் போயிற்று
குளம் என்று பாய்ந்தால்
குத்தும் முள்
பழம் என்று தொட்டால்
பட்டுவிடும் எச்சம்
எதற்க்கு இத்தனை
ஏமாற்றம்
இத்து செத்துவிடும்
என் இதயத்திற்கு

கேள்வி : உங்கள் கவிதையை படித்து முதலில் நன்றாக இருக்கின்றது என்று பாராட்டியது யார் ?

பதில் : கவிஞர்  சகோதரர் ஸாலிஹ் அஸீம்

கேள்வி : 'கவிதைக்கான கருவை முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; கவிதை தானாகவே உருவாகிறது அல்லது நேர்கிறது ' இதற்கு அர்த்தம் என்ன ? கவிதை ஆக்கத்தில் பிர்க்ஞை பூர்வமான உழைப்பு தேவையில்லை என்பதா ?

பதில் :  விதை கிடைத்தாலும் அதை மரமாக்கிட உழைப்புத் தேவை. அதுபோலவே கிடைக்கும் கருவை ரசிக்கும் கவிதையாக உருவாக்க கட்டாயம் உழைப்புத் தேவை.

கேள்வி :  உங்கள் கவிதை கொண்டு நீங்கள் மாற்ற அல்லது சாதிக்க விரும்புவது ?


பதில்  : பெண் அடிமை,  கலாசார சீர்கேடு,  போன்றன இல்லாது போய் பண்பும் பாசமும் ஒழுக்கமும் வளர்வதற்கு என் கவிதை வழி அமைக்கும் என்றால் அதனையே சாதனையாக நிச்சயம் கருதுவேன்.

கேள்வி :  மரபு,  புதுக்கவிதைகளைத் தாண்டி பின் நவீனக் கவிதைகள் இப்பொழுது எழுதப்படுகின்றன. அவை பற்றிய உங்கள் புரிதல் எப்படி?


பதில் : எதிலும் புதுமை படைக்கும் போதுதான் அது மக்களை சென்றடையும் . அந்த வகையில் கவிதையிலும் கட்டாயம் புதுமைத் தேவை அது வரவேற்கத்தக்கதே.


கேள்வி : இளம் வயதில் சிலஅடைவுகளை தொட்டுவிட்டீர்கள். இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா? 

பதில் : வாய்ப்புக்களும் முயற்சியும் கடின உழைப்பும்.

கேள்வி : இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள், வாசகர்கள் வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

பதில் : முதலில் கலையை நம் நாட்டில் வரவேற்பதே குறைவு . இப்படியிருக்க கலைஞர்கள் எப்படி வரவேற்கப்பட போகிறார்கள்?  ஆனால் இந்த நிலைமை மாற வேண்டும் . அழிந்துப் போகும் அழகு கலைகள் வாழ வேண்டும்.

நன்றி


நேர்காணலின் தொகுப்பு கற்பிட்டியின் குரல் நிருபர் (முகம்மது ஜீஷான் அசீர்)





Post a Comment

0 Comments