பழமை வாய்ந்த நகரான கல்முனை மாநகரம்,
முஸ்லிம்களின் தலை நகரமாக மதிக்கப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரசின்
ஆளுகைக்குட்பட்ட ஒரேயொரு மாநகரமாக இது காணப்படுவதுடன், எம்.எஸ். காரியப்பர்,
எம்.சி. அகமத், ஏ.ஆர். மன்சூர், எம்.எச்.எம். அஸ்ரப் போன்ற அரசியல் ஜாம்பவான்கள் இங்கிருந்தே
உருவானார்கள்.
இந்நாட்டில் உள்ள ஏனைய மாநகரங்களோடு
ஒப்பிடுகையில் கல்முனை மாநகரம் அபிவிருத்தியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே
உள்ளது. சாதகமற்ற தேசிய அரசியல் நிலை காரணாமாக, நவீன காலத்துக்கேற்ப அதனை
அபிவிருத்தி செய்யக்கூடிய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் இதுவரையில் முஸ்லிம்
காங்கிரசுக்கு ஏற்படவில்லை.
கல்முனை மாநகரை நவீன அபிவிருத்தி செய்தல்
வேண்டும் என்பது ரணில் விக்கிரமசிங்க உடனான முஸ்லிம் காங்கிரசின் தேர்தல்
உடன்படிக்கைகளில் ஒன்றாகும். அதற்கு ஏற்ப அதற்குரிய அனைத்து இறுதிக்கட்ட
ஏற்பாடுகளும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களினால் நிறைவு
செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் சில நாட்களில் இவ்வபிவிருத்தி திட்டத்தினை ஆரம்பித்துவைக்கும்
நிகழ்வு நடைபெற இருக்கின்றது.
இந்த நிலையிலேயே இன்று தமிழ் மக்களினால் இந்த
அபிவிருத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று
நடைபெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட தமிழர் மகாசபை என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படதாக
குறிப்பிட்டிருந்தாலும், இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பல தமிழ் அரசியல்
பிரமுகர்களும், ஏராளமான தமிழ் மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த புதிய நகர அபிவிருத்திக்காக கல்முனை மாநகரின்
மேற்கு பக்கமாக வயல் காணிகள் சுவீகரிக்கப்பட இருகின்றது. இந்த காணிகளில்
பெரும்பாலானவை முஸ்லிம் மக்களுக்குரியதாகும். அத்துடன் தமிழ் மக்களுக்குரிய
காணிகளும் அங்கு இருக்கின்றது. அபிவிருத்திக்காக காணிகளை சுவீகரிக்கும்போது ஒரு
சமூகத்தை விட்டுவிட்டு இன்னொரு சமூகத்தின் காணிகளை மட்டும் சுவீகரிப்பதில்லை. மகிந்த
அரசினால் வீதி அபிவிருத்திக்காக இனப்பாகுபாடு இன்றி ஏராளமான காணிகள்
சுவீகரிக்கப்பட்டு அதற்குரிய நஷ்ட ஈடுகளும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
எனவே காணிகளை எங்களால் இழக்க முடியாது என்றும்,
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினை அழிக்கும் நோக்கமே கல்முனை அபிவிருத்தி
திட்டமாகும் என்றும் தமிழ் மக்களினால் கோசமிடப்பட்டது.
திட்டமிட்டபடி கல்முனை மாநகரம் அபிவிருத்தி
செய்யப்பட்டால், முஸ்லிம் காங்கிரஸ் மீதும், அதன் தலைவர் மீதும் சேறு பூசும்
தொடர்ச்சியான விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும் என்பது
எல்லோரும் அறிந்த விடயமாகும்.
கல்முனை அபிவிருத்தி செய்யப்படவில்லை என்று
தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரசின் தலைவரை விமர்சிக்கும் அதன் எதிரிகளுக்கு இனி
தூற்றி திரிவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலை உருவாகி விடுவதோடு, முஸ்லிம் காங்கிரஸ்
மக்கள் மனதில் நிலையான வேரினை ஊன்றிவிடும் என்பது முஸ்லிம் காங்கிரசை அழிக்க
துடிக்கும் காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் எண்ணமாகும்.
எனவே முஸ்லிம் காங்கிரசை அழிக்க துடிக்கும்
சக்திகள் இவ்வாறான அபிவிருத்தி திட்டத்தினை தடுத்தி நிறுத்தும் பொருட்டு தமிழ்
மக்களை தூண்டிவிட்டார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது.
எது எப்படி இருப்பினும் முஸ்லிம் மக்களும்,
தமிழ் மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழுகின்ற இந்த மாநகரம் அபிவிருத்தி செய்யப்படுகின்றபோது
அதன் நன்மைகளை முஸ்லிம் மக்கள் மட்டும் அனுபவிக்கப்போபதில்லை. மாறாக இந்த இரு
சமூகங்களுமே அதன் அனைத்து நன்மைகளையும் அடைந்துகொள்வர்.
எனவே சூழ்ச்சிக்காரர்களின் சதிவலைகளில்
அகப்பட்டுவிடாமல் எதிர்கால சந்ததியினர்களின் நன்மை கருதி. கல்முனை மாநகரை
அபிவிருத்தி செய்வதற்கு முழு ஒத்துழைப்பினை தமிழ் மக்கள் வளங்குவதே
புத்திசாலித்தனமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
0 Comments