Subscribe Us

உப்புநீரில் ஒயில் கலந்து எழுதிய மரண சாசனம்


இந்த நாள் தான் -அது 
காலையில ஏழரை எட்டு 
மணியிருக்கும் !!!

வாப்பா வட்டைக்கு 
மீன் வீசப்போகிருந்தார் 
பழுதான தையல் மெசினில 
உம்மாவும் நூல் கொருத்திருக்கா !!!!

படுத்தொளும்பி பல்லுத்தீட்டல 
பழைய சொறி புடிச்ச குண்டையெலாம் 
தண்ணியில நிரப்பி 
களுவிக்கொண்டிருக்கையில !!!!

கடல் வருகுதுகா கௌலா 
என்றொரு சத்தம் 
கடலா......?
எழும்பிப்போகி பாக்கைல 
கரவலத்தோனியொண்டு 
பர்ஸானாட கூரையில..........

பக்கத்து ஒழுங்கையால 
ஓடியவனும் ஆலிம் ரோட்ல !!!

வெள்ளைக்குட்டி ஆலிம் 
மத்ரஸாவில ஓதிக்கொண்டிருந்த 
தங்கச்சியவளையும்  இழுத்துக்கொண்டு 
ஓடிப்போகிறான் 
கரைச்சை நிரம்பி வழிகிறது......

மேல்சட்டை எதுவுமில்லை 
சின்னப்பாலத்தை அடைந்திருந்தும் 
ஒழவு மிசிநேரிப்போனப்போ 
ஒருநாளும் கண்டிராத மகாராசி 
அவ சம்மாந்துறையில 
ஒரு மஞ்சள் சட்டை தந்தா !!!!!

காலைச் சாப்பாடாக 
அவதந்த ஸ்பான்ஜ் கேக் 
இன்றும் இனிக்கிறது 
அவ மனசி போல ......

சுதாகரித்துக்கொண்டு 
இப்போதான் சுய நினைவுக்கு- வந்தேன் 

தையல் மிசினிலிருந்த உம்மா 
வலை வீசப்போன வாப்பா 
குசினிக்க இருந்த மூத்த தங்கச்சி 
குடும்பத்தாருக்கு என்னாச்சி........?

ஓ விட்டு அழுகிறேன் .....!!!
பல கிலோமீட்டர் தூரத்தை 
நடந்தே கடக்கிறேன்....

என்னோடு விளையாடிய சிலரை 
வெள்ளை புடவையால் சுத்தி 
சம்மாந்துறை நகர மண்டபத்தில்  
முகந்திறந்து காண்கிறேன்.....

இதயம் பலமடங்கு 
வேகமாக துடிக்கிறது......
என் தாய்க்கு ஒப்பான எனது 
மாமி,
ஜனாஸாவாக காண்கிறேன்.....

இப்போதுதான் மயக்கமும் 
முகவரி தருகிறது....

தாருசலாம் பள்ளியிலிருந்து 
மர்ஜானுக்கு நடந்தே போகிறேன்....

நடு வீதியில் ஒருவர் 
மலிபன் விஸ்கட் பெட்டியை 
என்கையில் 
பலவந்தமாய் -திணிக்கிறார் 

சுமந்து கொண்டே 
மர்ஜானை அடைகிறேன்.....

நண்பகல் 12.30 
என்வாழ்வில் மற்றுமொரு முறை 
கருவறையில் நான் கேட்ட 
அதே இதயத்துடிப்பு !!!

இறுக்கியணைத்து என் தாய் 
அழுத அந்த கண்ணீர் இன்று 
நினைத்தாலும் 
உடல் ஆட்டம்காணும் !!!!

அடுக்கி வைத்த
அத்தனை மையத்துக்களையும் 
சுமந்து கொண்டு 
மையவாடிப்பள்ளியும்,
மஜீது மண்டபமும் 
விரக்தியில் நிற்கிறது........!!

உலகமே அழுத -நாள் 
அது என்று அவனறிய 
ஆண்டுகள் பல 
தேவைப்பட்டது........!!!

பள்ளிகள் இல்லையென்ற 
ஏக்கம் !!!
உறவுகளை இழந்த 
விரக்தி !!!
கடந்து போக மாதங்கள் 
பல ஆகிட்டு......

எத்தனை ஆண்டுகள் 
கடந்தாலும் -அவன் 
இரண்டாவது தாயாக 
சுவாசித்த அவன் மாமி 
வரவா போகிறா..........? 

@ கலைமகன் ஹுதா உமர் 
மாளிகைக்காடு -கிழக்கு
(இந்த கவிதை 100% எனது சொந்த அனுபவம் மட்டுமே...... என்னால் வெளியிடப்பட்ட 03 வது நூலான "இசை பாடும் மூங்கில் காடு"  கவிதை தொகுப்பு  நூலில் இடம்பெற்ற கவிதை இது.)

Post a Comment

0 Comments