ஒருவழியாக ஓட்டம் பிடித்து, சிரியாவை விட்டு சீசர் வெளியேறியபோது 2013- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓடிக் கொண்டிருந்தது . மற்ற அகதிகளெல்லாம் தாங்கள் சந்தித்த அவலங்களை வேதனைகளுடன் பகிர்ந்து கொண்டிருந்தபோது, சீசர் மட்டும் தனது அனுபவங்களை புகைப்படங்களாக எடுத்து வந்திருந்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, சரியாகச் சொன்னால் 53 ஆயிரத்து 275 போட்டோக்கள் சீசருடன் இருந்தது.
கடந்த 2011-ம் ஆண்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தின்போது சிரிய அரசாங்கத்திற்கு, தடவியல் போட்டோகிராபராக பணியாற்றி வந்தவர்தான் இந்த சீசர். போர்க்காலங்களில் ஏற்பட்ட சேதங்களையும், உயிரிழப்புகளையும் படமெடுத்து ஆவணப்படுத்துவதுதான் இவரது முக்கிய பணி. இவர் எடுத்த நிழற்படங்களில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஆகியோரை விட, பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, துன்புறுத்திச் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் அடங்கிய புகைப்படங்களே அதிகமாக காணப்பட்டன .
இவற்றுள் சில சடலங்கள் துன்புறுத்தப்பட்டு, தரையோடு தரையாக நசுங்கியும், குலை நடுங்கும் வகையிலும் காணப்படுகின்றன. மனிதாபிமானமற்றவர்களால் விளைந்த மரணங்கள் இவைகள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின் சீசருக்குள் ஒரு துணிவு பிறக்கிறது.
சிரியா அரசாங்கத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த சில புரட்சிப்படைகளின் உதவியோடு, கத்தாரில் இயங்கிவரும் நிறுவனம் ஒன்றின் மூலம், லண்டன் ஊடகத்திற்கு இந்த புகைப்படங்களை உயிரை பணயமாக வைத்துக் கொண்டு போய் சேர்த்தார். இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளைக்கண்டு சிரிய அதிபர் பஷார் அல் அஸாத் அச்சம் கொள்ளவில்லை.
மாறாக, "போர்க்குற்றம் என்று யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்; சட்டப்படி நிரூபிக்க இது போதுமான ஆவணம் கிடையாது, இது வீண்பழி சுமத்தும் முயற்சியே' என்று அலட்சியமாக தட்டிக்கழித்தார் அவர்.
ஆனால் இந்த கொடுமையான நிகழ்வுகளையெல்லாம் அப்படியே விட்டு விட விரும்பாத மனித உரிமைகள் ஆணையம், குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு ரகசியமாக சிரியா சென்று, சம்பவங்கள் நடந்ததாக கூறப்படும் இடங்களில் ஆய்வு நடத்தி, புகைப்படங்கள் அனைத்தும் உண்மையே என்று உறுதி செய்தது.
இதற்கு மட்டும் ஆறு மாத காலம் பிடித்தது. ஆய்வின் முடிவில், சீசரின் ஆவணங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவையே என்றும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு, மனித உரிமைக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததற்காக, பஷார் மீது வழக்குத் தொடரலாம் என்றும் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் தேடிப் போனபோது, கிட்டத்தட்ட 27 குடும்பங்கள் தங்கள் சுற்றத்தாரை இழந்ததையும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் கண்ணீர் மல்க வாக்குமூலமாக அளித்துள்ளனர்.
பட்டினி போடுதல், அடித்துத் துன்புறுத்துதல், உட்காரவிடாமல் நிற்க வைத்துச் சித்ரவதை செய்தல், உடலுறுப்புகளை துண்டித்தல் என்று ஈழத்தில் நடந்த அத்தனை கொடுமைகளும் சிரியாவில் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் மருத்துவ பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அகதிகள், சாட்சி சொல்வதற்காக, நூற்றுக்கணக்கில் குவிந்த வண்ணம் உள்ளனர்;
மொத்தத்தில் மீண்டும் ஒரு ஈழமாக ... சிரியா உலகத்தின் முன் கண்ணை கசக்கிக் கொண்டு நிற்கிறது!


0 Comments