2015ம் ஆண்டு கலாபூசணம் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் கலைஞர்களின் எண்ணிக்ககையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கலைஞர்கள் தெரிவிக்கையில்,
நாடளாவிய ரீதியில் கடந்த ஆண்டும் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 100 தமிழ் கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் இவ் ஆண்டு நாடாளாவிய ரீதியில் இருந்து 70 தமிழ் கலைஞர்களே விருது வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் இவ் ஆண்டு கலாபூசணம் விருது பெறுவதற்காக விண்ணப்பித்த பெரும்பாலான தமிழ் கலைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
இதேவேளை கடந்த ஆண்டு வன்னி பெருநிலப்பரப்பை உள்ளடக்கிய வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 12 தமிழ் கலைஞர்கள் கலாபூசணம் விருது பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இவ் ஆண்டு 5 கலைஞர்கள் மட்டுமே விருது பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
போதியளவு தகமைகள் இருந்தும் குறித்த விருதுக்கு விண்ணப்பித்த தமக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாக தெரிவித்த கலைஞர்கள் இவ் விடயம் தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தில் இருந்து முதன் முறையாக 18 கலைஞர்கள் கலாபூசணம் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் சுவாமி அலங்காரம் மற்றும் சமூக சேவை எனும் புதிய துறைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எமது பகுதி தமிழ் கலைஞர்களை புறம்தள்ளியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments