மந்தகதியில் நடைபெற்று வந்த காலாவி குடிநீர் விநியோகத் திட்ட செயற்பாடுகள், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் பேரில் துரித வேகத்தில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், புத்தளம் நகருக்கு காலாவி ஆற்றிலிருந்து சுத்தமான குடிநீரை கொண்டு வரும் இந்த நீர் விநியோகத் திட்டச் செயற்பாடுகள் 2016ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்க வேண்டிய திட்டமாகும்.
ஆனால், இதன் செயற்பாடுகளோ மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறன.
இதன் ஒவ்வொரு வேலைகளையும் பொறுப்பெடுத்த ஒப்பந்தக்காரர்கள் அசமந்தப்போக்கிலே குறைந்த ஆளணிகளையும் இயந்திரங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.
அது மட்டுமன்றி இத்திட்டத்துக்காக உள்வாங்கப்பட்டிருந்த கிராமங்கள் தவிர்க்கப்பட்டு அதற்குப் புறம்பாக புதிய பிரதேசங்களும் கிராமங்களும் உள்வாங்கப்பட்டுள்ள விடயம் நடந்தேறியுள்ளது.
இந்நிலையில்; இப்பணிகளைப் பார்வையிட கள விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீமின் துரித நடவடிக்கையினால் இத்திட்டம் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
இது பூர்த்தி செய்யப்படுமிடத்து புத்தளம் நகர மக்கள் 24 மணித்தியாளங்களும் சுத்தமான குடிநீரைப் பருகும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார்.
- எம்.யூ.எம். சனூன்
0 Comments