Subscribe Us

header ads

இஸ்லாமிய தொழுகை முறையும்… அதன் 10 பலன்களும்…!

இஸ்லாத்தைத் தழுவிய ஒவ்வொருவரின் முதற்கடமையும் அன்றாடம் தவறாமல் தொழுகையை மேற்கொள்வது. இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய இறை வழிபாட்டின் போது மேற்கொள்ளப்படும் தொழுகையை ஓர் சிறந்த உடற்பயிற்சி என்றும் சொல்லலாம். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் வகையில் மேற்கொள்ளும் தொழுகையினால், ஒருவரின் பாவங்கள் நீங்குவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
சொல்லப்போனால் இஸ்லாமியர்கள் தினமும் தவறாமல் தொழுகையைப் பின்பற்றினால், அது உடற்பயிற்சி செய்ததற்கு சமம். அதுமட்டுமின்றி, தொழுகையை மன அமைதியுடன், மனதை ஒருமுகப்படுத்தி மேற்கொள்ளும் போது, அதனால் ஏராளாமான நன்மைகள் கிடைக்கும்.
முக்கியமாக தொழுகை செய்வதற்கு உடை, உடல், இடம் போன்றவை மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் தொழுகைக்கு முன் கை, கால், முகம் கழுவும் உளு முறையைப் பின்பற்றுவார்கள்.
இப்போது இஸ்லாமிய தொழுகையினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
நன்மை 1
உளு முறையின் போது கை, கால், முகப் பகுதிகளில் உயிரியல் ரீதியாக செயல்படும் புள்ளிகள் தூண்டப்பட்டு, அவ்விடங்களில் உள்ள பிரச்சனைகள் குணமாகும். சொல்லப்போனால் இம்முறை சீன ரெப்ளெக்சோ தெரபிக்கு இணையானது.

நன்மை 2
உளு முறையின் போது இரு கைகளையும் விரல் நுனியில் இருந்து மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுவார்கள். இப்படி செய்வதால் கைகளில் உள்ள கிருமிகள் முழுவதும் நீக்கப்பட்டு, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது.

நன்மை 3
உளு செய்யும் போது மூன்று முறை வாயை சுத்தமான நீரில் கொப்பளிப்பார்கள். இதனால் வாயில் உள்ள உணவுத்துகள்கள், கிருமிகள், தூசிகள் போன்றவை முழுமையாக வெளியேற்றப்படுகிறது. இதனால் சளி, இருமல் போன்றவற்றின் தாக்கம் குறையும். அதுமட்டுமின்றி, வாயைக் கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றமும் நீக்கப்படும்.

நன்மை 4
உளு முறையின் போது மூக்கை மூன்று முறை நீரில் கழுவுவார்கள். இதனால் மூலம் மூக்கில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, மூக்கின் வழியாக கிருமிகள் நுழைவது தடுக்கப்படும். மேலும் மூக்கை கழுவுவதால், சுவாசிப்பதில் உள்ள பிரச்சனை நீங்கும்.

நன்மை 5
உளு செய்யும் போது முகத்தை மூன்று முறை கழுவுவார்கள். இப்படி கழுவுவதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசை நீக்கப்பட்டு, முகப்பரு, சரும சுருக்கம் மற்றும் முகத்தில் வரும் பல பிரச்சனைகளை தடுக்கப்படும்.

நன்மை 6
உளு செய்யும் போது காதுகளும் நீரினால் சுத்தம் செய்யப்படும். அப்படி செய்வதன் மூலம் காதுகளில் அழுக்குகள் சேர்வது குறையும். அதிலும் நீரில் நனைத்த ஈரமான விரல்களைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம், காதுகளில் இடுக்குகளில் உள்ள தூவிகள் மற்றும் கிருமிகள் முழுவதும் வெளியேற்றப்படும்.

நன்மை 7
உளு செய்யும் போது இரண்டு கால்களையும் விரல் நுனியில் இருந்து கணுக்கால் வரை கழுவுவார்கள். இப்படி செய்வதால், பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் பூஞ்சைகள் வெளியேற்றப்படுகிறது. மேலும் கால்களைக் கழுவும் போது பாதங்களில் உள்ள பல்வேறு அக்குபிரஷர் புள்ளிகள் அழுத்தப்படுவதால், முதுகு வலி, ஆர்த்ரிடிஸ், மூட்டு வலிகள் போன்றவை தடுக்கப்படும்.

நன்மை 8
தொழுகைக்கும் யோகாவிற்கும் நிறைய தொடர்புள்ளது. யோகா உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சி அடையச் செய்யும். யோகாவின் மூலம் உடலின் பல பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இதேப் போன்று தொழுகையும் பின்பற்றப்படுவதால், யோகாவினால் பெறும் நன்மைகளை, தொழுகையின் மூலமும் பெறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வேண்டுமானால் யோகா செய்முறையையும், தொழுகையின் முறையையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.

நன்மை 9
இஸ்லாமிய தொழுகை ஒரு வகையான தியான முறையாகும். எப்படி தியானத்தின் போது மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, அமைதியாகிறதோ, அதேப்போல் தொழுகை மேற்கொள்ளும் போதும் மனதில் உள்ள அழுத்தங்கள் நீக்கப்பட்டு, டென்சன் குறையும். ஆனால் ஒன்று, தொழும் போது வேறு எதைப் பற்றியும் நினைவில் கொள்ளாமல், அல்லாஹ்வை மட்டும் மனமுருகி நினைக்க வேண்டும். முக்கியமாக தினமும் தொழுகையை மேற்கொண்டால் கவனச்சிதறல் ஏற்படுவதைத் தடுத்து, மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளலாம். மனம் அமைதியாக இருந்தால், உடலில் பிரச்சனைகள் வருவது குறையும்.

நன்மை 10
தொழும் போது ருகூவு என்று சொல்லப்படும் நிலையான, முதுகை வளைத்து முன்னோக்கி குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு விரல்களை விரித்தவாறு- மூட்டுக்கால்களைப் பிடித்து, தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கும் போது, முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலி, இடுப்பு வலி, மூழங்கால் மூட்டு வலி, பாத வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்நிலையின் போது அடிவயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால், மலச்சிக்கல் பிரச்சனை வருவது குறையும்.

நன்மை 11
தொழும் போது மேற்கொள்ளும் ஸுஜுது நிலை, வஜ்ராசனம் என்னும் யோகா நிலைப் போன்றது. ஸுஜுது நிலையின் போது முகம், இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு கால் விரல்களின் மேல்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் இருக்க வேண்டும். முக்கியமாக முழங்கை தரையில் படக்கூடாது. இந்நிலையினால் தொடையில் உள்ள தசைகள் வலிமையாவதோடு, செரிமானம் சீராக நடைபெறும். மேலும் இந்த நிலையினால் மூளை, நுரையீரல், உடல் தசைகள், மூட்டுகள், முதுகின் கீழ் பகுதி போன்ற பகுதிகள் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக இந்த நிலையை மேற்கொள்ளும் போது இரத்த ஓட்டம் மூளைக்கு சீராக செல்வதால், தலை வலி ஏற்படுவது குறையும்.

நன்மை 12
சலாம் ஓர் அற்புதமான கழுத்து மற்றும் மேல் முள்ளெழும்பிற்கான உடற்பயிற்சி. தொழுகையின் இறுதியில் செய்யப்படும் சலாம் கழுத்தில் உள்ள இணைப்புக்களை தளரச் செய்வதோடு, தோள்பட்டை மற்றும் மேல் முதுகு தசைகளும் ரிலாக்ஸ் ஆவதற்கு உதவும். மொத்தத்தில் சலாம் செய்வதால், கழுத்தின் வழியே செல்லும் அனைத்து நரம்புகளும் புத்துணர்ச்சியடைந்து, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.

Post a Comment

0 Comments