Subscribe Us

header ads

ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை தேவைதானா ?

ஒவ்வொரு வருடம் போல இம்முறையும் , ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை முடிவுகள் வெளியாகி பல வாதப்பிரதிவாதங்களை வழமை போல ஏற்படுத்தி இருப்பதை காணமுடியும். இந்த பரீட்சையில் வெற்றி பெற்றவர்களும் , குறிப்பாக அவர்களின் பெற்றோர்களும் ஒரு நீண்ட பெருமூச்சு மற்றும் ஓய்வை நோக்கி தம்மை செலுத்தவும் , தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் , மேலும் மன கவலை மற்றும் ஏனையோரின் கேள்விகளினால் ( என்ன பாஸ் பண்ணலியா ? ) நீண்ட ஒரு உணர்ச்சி போராட்டத்தில் இருப்பதையும் அறிந்து கொள்ள கூடியதாய் இருப்பது , இந்த பரீட்சை எந்த அளவுக்கு ஒரு சமூக உளவியல் இறுக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது உணர முடியும்.

முதலில் , ஐந்தாம் ஆண்டு பரீட்சை என்பது ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சை அல்ல என்பதை எமது பெற்றார்கள் அல்லது மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

அதற்கு முன் , எமது அரசு இது போன்று மாணவர்களின் மீது தன்னிச்சியாக சுமத்தப்படும் சிறுவர்களின் வயதுக்கு மீறிய பரீட்சைகளை நடாத்துவது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

சிறந்த பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்வாங்கல் என்ற ஒரு விடயமும் , வறிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல் என்ற ஒரு விடயத்திற்காக இந்த பரீட்சைகள் இடம்பெறுவது என்று அரசு கருதினால் , அதைவிட அவர்கள் இந்த பரீட்சையை ஒரு வியாபாரமாக அறிவித்து செய்ய முடியும்.

ஒரு இலங்கையில் பிறந்த மாணவனுக்கு , தாம் விரும்பிய பாடசாலையில் கல்வி கற்கும் உரிமையை மறுப்பதற்கு ஒப்பானதாகவே இந்த பரீட்சை இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். அதை விட அடிப்படை உரிமை மீறல் என்றும் கூற முடியும். அது மட்டுமல்ல , வறிய மாணவர்களுக்கான உதவித்தொகை என்பது ஒரு போட்டி பரீட்சையின் மூலம் வழங்கப்படுவது என்பது எவ்வளவு கொடூரம். இந்த பரீட்சையை சித்தி அடைந்த வறிய மாணவர்களை விட , இதில் தவறிய வறிய மாணவர்களே அதிகமாக இருக்கும் போது , இந்த பரீட்சையின் உள்ளார்ந்த நோக்கம் மிக வெளிப்படையாகவே சிதைக்கபடுவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத ஒரு பரீட்சை முறை எமது நாட்டில் இருப்பது நிச்சயம் அதிசயமாகவே நோக்கப்படல் வேண்டும். கல்வியை கிட்டத்தட்ட நூறுவீதம் வியாபாரமாக மாற்றி விற்றுக்கொண்டிருக்கும் எமது அண்டை நாடான இந்தியாவில் கூட இது போன்ற ஒரு பரீட்சை இல்லாமல் இருப்பது நாம் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயமாகும்.

அது மட்டுமல்லாமல் , பரவலான மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் எல்லாம் , ஐந்தாம் வகுப்பு வரை பரீட்சைகளே இல்லாமல் , சிறு குழந்தைகளை அவர்களின் எண்ணம் போல வாழ , வெறும் கல்வி ஊட்டல் நிகழ்சிகளை மட்டுமே நடாத்தும் நிலையில் , ஐந்தாம் ஆண்டு பரீட்சை என்னும் மிகப்பெரும் சுமையை எமது பிஞ்சு குழந்தைகளுக்கும் , அதைவிட பரப்பரப்பு மற்றும் எதிர்பார்ப்பை பெற்றோர்கள் மீது திணிக்கும் இந்த பரீட்சை தேவை தானா என்பதை நாட்டில் உள்ள கல்வியலாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இக்காலங்களில் , ஐந்தாம் ஆண்டு பரீட்சை என்பது பல ஊர்களில் உள்ள , சிறிய மற்றும் பெரிய பாடசாலைகளின் அடைவு மட்ட அளவுகோலாக மாறியும் , பலருக்கு மிகப்பெரும் வியாபார விடையமாக உருமாறி , நேரம் காலம் என்று பாராமல் , இரவு ஏழு, எட்டு மணி வரை "டியூஷன் " என்ற மாபெரும் பொறிக்குள் மாணவர்களை சிக்கவைத்துக்கொண்டிருக்கும் வியாபர தந்திரமாகவும் மாற்றமடைந்துள்ளதை தவிர , எமது கல்வியில் வேறெந்த புரட்சியையும் ஏற்படுத்தவில்லை.

இது போன்ற பரீட்சைகளின் முக்கியத்துவம் மற்றும் தேவை என்பன சரியாக ஊட்டப்படாமலே அப்போது சுமார் 30 வருடங்களுக்கு முன் நானும் இந்த பரீட்சையில் தோன்றி தோல்வியுற்றாலும் அப்போது நாம் அந்த தோல்வியின் வலியை கூட உணர முடியாத வயதில் இருந்ததை எண்ணி பார்க்கும் போது இந்த பரீட்சையின் தேவையினை உணர்ந்து கொள்ள முடியும்.

நாட்டில், சிறுவர்களின் , உடல், உளவியல் விடையங்கள் என்று வரும்போது மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி வரும் விடயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் , எமது அரசு மற்றும் செய்தி ஊடகங்கள் , மற்றும் சிறுவர் நல காப்பாளர்கள் எல்லாம் இந்த பரீட்சைகளுக்கு பின்னால் இருக்கும் , சிறுவர் மன உளைச்சல் , சிறுவர் அடிப்படை உரிமை மீறல் , சிறுவர் சுயாதீன துஷ்பிரயோகம் குறித்து மிகவும் அவதானமாக ஆராய்ந்து , அரசுக்கு வலியுறுத்துவதன் மூலம் , எதிர்கால மன உளைச்சல் அற்ற சிறார்களை உருவாக்க முற்படவேண்டும்.

ஐந்தாம் ஆண்டு பரீட்சை ,சிறுவர்களுக்கான ஐந்து ஆண்டுகால சிறை !!

-Athamba Waqir Hussain-

Post a Comment

0 Comments