Subscribe Us

header ads

பெண்குழந்தைகளுக்கு கல்வி கட்டாயமாக்க வேண்டும்: மலாலாவின் கருத்துக்களை பரப்ப வரும் ஆவணப்படம்

உலகிலேயே முதன்முறையாக மிக இளம் வயதிலேயே நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாய், தனது வாழ்வைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

பெண் கல்விக்காக குரல் கொடுத்ததற்காக கடந்த 2012-ம் ஆண்டு பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கிக்குண்டுகளை பரிசாக பெற்ற போதும், துளியும் அச்சமின்றி தொடர்ந்து, பெண் கல்விக்காக குரல் கொடுத்துவரும் மலாலா 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்.

பெண் குழந்தைகளுக்கு 12 ஆண்டுகளுக்கு கட்டாயமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்திவரும் அவரின் முழக்கத்தை பரப்புவதாகவும், அதேநேரத்தில், ஒரு சாதாரண சிறுமியாக தனது தம்பிகளுடன் சண்டையிடும் அக்காவாகவும் இந்த ஆவணப்படத்தில் தோன்றியுள்ளார் மலாலா. சுமார் இரண்டு ஆண்டுகளாக இது படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது லண்டனில் வசித்துவரும் மலாலா, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அக்டோபர் 11-ம் தேதி வெளிவர இருக்கும் தனது ஆவணப்படம் பற்றி பேட்டியளித்தார்.

அப்போது பாகிஸ்தானில் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றிப் பேசிய மலாலா, தனது ஊர் மட்டுமன்றி உலகின் அனைத்துப் பெண்களுக்கான கல்விக்காகவும், போராடும் தைரியத்தை அந்த துப்பாக்கி குண்டுதான் தந்ததாக தெரிவித்துள்ளார்.

தனது 18-வது பிறந்தநாளை சிரிய அகதிகளுடன் கொண்டாடிய மலாலா, தன்னுடைய ‘மலாலா பண்ட்’ என்ற லாப நோக்கற்ற தொண்டு நிறுவனம் மூலமாக சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் ஒரு பள்ளியைத் தொடங்கியுள்ளார்.

மலாலாவின் அப்பா அவருக்கு ஆப்கானிஸ்தானில், பிரிட்டன் ராணுவத்தை எதிர்த்து போராடிய ஒரு மாவீரனின் பெயரையே மலாலாவுக்கு வைத்ததாக தெரிவித்தார். ‘ஹீ நேம்ட் மி மலாலா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், தந்தை, மகளுக்குள் உள்ள பாசப்பிணைப்பையும் செவ்வனே காட்சிப்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments