தற்போதைய காலகட்டத்தில் வங்கியில் கணக்கு இல்லாதவர்களை கூட பார்த்துவிடலாம், ஆனால் பேஸ்புக்கில் கணக்கில்லாதவர்களை காண்பது அரிது.
அந்தளவுக்கு இளைஞர்கள், முதியவர்கள் என்று எல்லோரிடமும் பின்னி பிணைந்துள்ளது பேஸ்புக்.
உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
காலையில் எழுந்தவுடன் கடவுள் முகத்தில் விழித்தவர்கள் இன்று பேஸ்புக் முகத்தில் தான் விழிக்கின்றனர்.
இதற்கிடையே பேஸ்புக் மனிதர்களின் நேரத்தை திருடுவதாகவும், அதனால் எந்த பயனும் இல்லை என்ற குரலும் ஒலிக்க தான் செய்கிறது.
இந்நிலையில் மக்களுக்கு பயன்படும் பல்வேறு நல்ல விடயங்களையும் பேஸ்புக்கில் அதன் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் புகுத்திவருகிறார்.
உதாரணமாக அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்தபோது அதனை கொண்டாடும் வகையில் நமது முகப்பு படத்தை வானவில் வண்ணத்தில் வைத்துக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியது.
இதேபோல் சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு சம்பவங்களின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் நிலை குறித்து அறிவதற்காக Safety Check என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.
இது, நேபாள பூகம்பம் மற்றும் சமீபத்தில் சிலியில் ஏற்பட்ட பூகம்பம் ஆகிய சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களில் நிலை குறித்து அறிவதற்கு பயனுள்ளதாக இருந்தது.
இதேபோல் பேஸ்புக் பயனாளர்களுக்கு அறிவியல், கல்வி, தொடர்பான தகவல்களை அளிப்பதற்கும் அவர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் நேரடி கேள்வி பதில் என்ற வசதியை கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
இதன் மூலம் கொமண்ட் பகுதியில் பயனாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக வீடியோ மூலம் மார்க் ஸக்கர்பெர்க் பதிலளித்து வருகிறார்.
அவர் மட்டுமல்லாமல் இன்னும் பிற பிரபலங்களும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குபெற்று பதிலளித்து வருகின்றனர்.
இதற்கிடையே பேஸ்புக்கில் பகிரப்படும் துக்க செய்திகளுக்கு நமது அனுதாபத்தை தெரிவிக்க வேண்டுமென்றாலும் அதனை லைக் செய்து தான் ஆகவேண்டும். இது நெருடலாக இருப்பதாக பலரும் கூறிவந்தனர்.
இந்நிலையில் பேஸ்புக்கில் லைக் பட்டனை போன்று டிஸ்லைக் பட்டனும்விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சோக நிகழ்வுகள், அசம்பாவிதங்கள் போன்றவை பற்றி பகிரப்படும் தகவல்களுக்கு நமது உணர்வுகளை சரியாக பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
இதேபோன்று மேலும் பல்வேறு பயனுள்ள வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தின் 'இண்டர்நெட் டாட் ஆர்க்' திட்டத்தின் ஒருபகுதியாக இணைய வசதி இல்லாத பகுதிகள், இணையத்தின் வேகம் மிக குறைவாக உள்ள பகுதிகளில் 'அமோஸ்-6' செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
இதன் முதல்கட்டமாக வரும் 2016-ம் ஆண்டு சஹாரா துணைக்கண்டத்துக்கு உட்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் அதிவேக இணையவசதியை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் 'அமோஸ்-6' செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இணையச்சேவையின் மூலம் வேலைவாய்ப்பு, வேளாண்மை தொடர்பான தகவல்கள் சார்ந்த தளங்கள், மருத்துவம், கல்வி மற்றும் பேஸ்புக் ஆகிய இணையச் சேவைகள் இங்குள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments