Subscribe Us

header ads

வலிப்பு ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு

பேருந்து பயணத்தின் போது, வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தையை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காப்பாற்றியுள்ளனர்.
file picture
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அரசுப் பேருந்து மதுரைக்குப் புறப்பட்டுள்ளது.

பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அதில் சேலத்திலிருந்து மதுரைக்குப் பயணம் செய்த தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை அபினவதனுக்கு காய்ச்சல் அதிகமாகி, வலிப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது அந்தப் பேருந்து பஞ்சப்பூர் அருகே சென்று கொண்டிருந்துள்ளது.

திருச்சி நகர எல்லையைத் தாண்டினால் மருத்துவமனை இருக்காது என்பதால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீண்டும் பேருந்தை திருச்சிக்கு திருப்பியுள்ளனர்.

பின்னர், எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிகிச்சை நடக்கும் வரை சக பயணிகள் பொறுமையாக காத்திருந்துள்ளனர்.

சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு பேருந்து மீண்டும் மதுரைக்குப் புறப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அருண்குமார் கூறுகையில், வலிப்பு முற்றியிருந்தால் குழந்தை சுய நினைவை இழந்திருக்கும்.

மூளையில் லேசான பாதிப்பும் ஏற்பட்டிருக்கலாம். இதனால், குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது, வலிப்பு வரவும் வாய்ப்புள்ளது.

ஆனால், குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததால், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு கொண்டு சென்று காப்பாற்றிய அரசு ஓட்டுநர் ராமரையும், நடத்துநர் பாஸ்கரனையும் பயணிகள் பாராட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments