Subscribe Us

header ads

மட்டு- பொத்துவில் ரயில் சேவை; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்!

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படப்பட வேண்டும் எனக் கோரும் பிரேரணை ஒன்று கல்முனை மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்படுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை (07) மாலை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போது மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் இப்பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதி முதல்வர் கூறியதாவது;

"தற்போது மட்டக்களப்பு வரை நடைமுறையில் உள்ள ரயில் சேவை அங்கிருந்து பொத்துவில் வரை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்கின்ற இப்பிராந்திய மக்களின் நீண்ட கால அபிலாஷையை, தான் ஜனாதிபதியாக வெற்றியீட்டினால் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக கல்முனைக்கு விஜயம் செய்திருந்த மைத்திரபால சிறிசேன ஜனசமுத்திரத்திற்கு மத்தியில் வாக்குறுதியளித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அப்படி வாக்குறுதி அளிக்கப்பட்ட பல விடயங்கள் தற்போது அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதுபோல் மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் சேவைத் திட்ட உத்தரவாதத்தையும் நிறைவேற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பிராந்திய மக்கள் சார்பில் கல்முனை மாநகர சபை வலியுறுத்துகின்றது.

கடந்த 1992ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் அப்போதைய வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் தலைமையில் அரச உயர்மட்டக் குழு ஒன்று ஈரான் சென்று மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் சேவைத் திட்டம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாக அங்கிருந்து பொறியியலாளர் குழுவொன்று இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு சாத்தியவள அறிக்கையை தயாரித்திருந்ததை இங்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன்..

இருப்பினும் 1994ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் வடக்கு- கிழக்கு யுத்தமும் இம்முயற்சிகளை ஸ்தம்பிக்கச் செய்து விட்டமை கவலைக்குரிய விடயமாகும். எவ்வாறாயினும் தற்போது நாட்டில் நல்லாட்சியுடன் கூடிய அமைதிச் சூழல் காணப்படுவதால் இப்பிராந்திய மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக எமது கல்முனை மாநகர சபை இப்பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை வெற்றி கொள்வதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் சேவைத் திட்டத்தை சாத்தியப்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகளை முன்வைத்ததுடன் உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினர். பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சபை அமர்வானது கல்முனை மாநகர சபையின் இறுதியான சபை அமர்வாகும். எதிர்வரும் 16ஆம் திகதியுடன் கல்முனை மாநகர சபையின் பதவிக் காலம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(செயிட் ஆஷிப்)

Post a Comment

0 Comments