கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் தவித்து வரும் கீதா வரும் 26-ம் தேதி இந்தியா அழைத்து வரப்படவுள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த காது கேளாத, பேச முடியாத 7 வயது சிறுமி கீதா 15 வருடத்திற்கு முன்பு ரயிலில் வழிதவறி தனியாக லாகூர் சென்றார். அங்கு தவித்த அவரை அங்குள்ள தன்னார்வ அமைப்பினர் மீட்டு கராச்சிக்கு அழைத்துச் சென்று வளர்த்து வந்தனர். தற்போது 22 வயதாகிவிட்ட மாற்றுத்திறனாளியான கீதா, பாகிஸ்தானில் இருப்பது இந்திய வெளியுறவு துறைக்கு தெரியவந்தது.
மேலும் கீதாவை இந்தியா கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. விரைவில் அவர் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தீவிர முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, வரும் 26- ம் தேதி அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என முன்னர் செய்திகள் வெளியாகின.
அந்த தகவலை தற்போது வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவருடன் கீதாவுக்கு இவ்வளவு நாள் அடைக்கலம் அளித்துவந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர், இந்திய அரசின் விருந்தினர்களாக வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு வந்ததும் கீதாவின் டி.என்.ஏ.வை பரிசோதித்த பின்னர், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.ய


0 Comments