Subscribe Us

header ads

மக்களுக்காகத்தான் கட்சி, கட்சிக்காக மக்களில்லை என்பதை மு.காவின் தலைவர் புரிந்து கொள்ளவேண்டும்.


மக்களுக்காகத்தான் கட்சி கட்சிக்காக மக்களில்லை என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவரும் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும்.

கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு தொடராக இரு முறைகள் தேசியப்பட்டியல் வழங்கி, இராஜாங்க அமைச்சர் பதவியும் பெற்றுக்கொடுத்த கட்சியையும் தலைவர் ஹக்கீமை அவர் வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்ந்து கட்சியின் தலைமையுடன் இணைந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடவேண்டும்.

இது அவ்வாறில்லாமல் கட்சியின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்முறையும் தேசியப் பட்டியல் எம்.பியை தனக்கு தரவேண்டும் என்று தலைவருடன் சண்டை பிடித்து அடம் பிடிப்பது இது எந்த விதத்தில் நியாயமாகும். வாக்களித்த மக்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதற்கு என்ன பதில் என்று வாக்களித்த மக்களால் மட்டும்தான் கொடுக்கமுடியும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கடந்த பொதுத் தேர்தலில் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் எம்.பியை தருவதாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போது மிக ஆணித்தரமாக வாக்குருதியளித்திருந்தார்.  

அந்த வார்த்தையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் காப்பாற்றுவார் என்று மிக ஆவலாக எதிர்பார்த்தவண்ணம் அட்டாளைச்சேனை பிரதேச மக்களையும் தான்டி அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்கள் இன்று எதிர்பார்த்து நிற்பதையும், வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போராளிகளுக்கு மத்தியிலும் மிக பரவலாக பேசி வருவதையும் நன்கு அவதானிக்க முடிகின்றது.

கட்சியின் தலைவர் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் முயற்சியில் கட்சியின் செயலாளர் இருப்பதா? அல்லது இதனை மீறும் செயற்பாட்டில் நடந்து கொள்வதா?

இது அவ்வாறில்லாமல் தனக்கு தேசியப்பட்டியல் எம்.பியை தாருங்கள் என்று தலைவருடன் சண்டையிட்டு அடம்பிடித்துக்கொண்டு செல்வதை யார்தான் ஏற்றுக்கொள்ள முடியும்.

செயலாளர் ஹசன் அலியின் செயற்பாடு தொடர்ந்தும் இவ்வாறு செல்லுமாக இருந்தால் காலப்போக்கில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மக்கள் நிராகரித்து அக்கட்சியின் வளர்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் பலம் குறைந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பலம் இன்னும் இன்னும் மேலோங்கிக் காணப்படும் சாத்தியம் அதிகமாகத் தோன்றும் என்பதையும், தேசிய காங்கிரஸ் என்று சொல்லப்படும் “அதாஉல்லா” அணியிக்கு இத்தேர்தலின்போது பொதுமக்கள் எவ்வாறு பாடம் புகட்டினார்களோ அதே பாடத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் புகட்டுவது பெரிய காரியமல்ல என்பதையும் நான் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்நிலைமையை உறுவாக்குவதும், இல்லாமல் செய்வதும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீமின் கையில்தான் உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொடுத்த வாக்குறுதிகளை சரியாக செவ்வனே செய்யுமாக இருந்தால் இக்கட்சியின் தலைமையை மு.காவின் போராளிகள் தொடர்ந்தும் தலைமேல் சுமக்க தயக்கமடையமாட்டார்கள் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை என்பது திண்ணம்.

ஆனால் வாக்களித்த மக்களை இம்முறையும் ஏமாற்ற நினைத்து கதைகள் சொல்லுவாரானால் மக்கள் மக்களாக இல்லாமல் ஒரு விஸ்பரூபம் எடுத்து நாம் தொடர்ந்தும் ஏமாறும் ஏமாளிகள் அல்ல என்பதை நிருபிக்கும் சாத்தியத்துடன் இருப்பதாகவும் கட்சியின் போராளிகளுக்கு மத்தியில் மிகப் பரவலாக பேசப்பட்டு வருவதையும் கேட்கக்கூடியதாக உள்ளது.

கட்சிக்காகத்தான் மக்கள் உள்ளனர் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலுள்ள சிலர் அன்று நினைத்தது போன்று, இன்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் மக்களை இப்போது மிகச் சுலபமாக ஏமாற்றும் நோக்கில் கதைகளைச் சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இது அப்போதிருந்த மக்களைப் போன்று இப்போதுள்ள மக்களில்லை. இப்போதுள்ள மக்கள் நல்லது எது கேட்டது என்று மிகத் தெட்டத்தெளிவாக ஆராய்ந்து பகுத்தறியும் காலமாக உள்ளது. இன்னமும் மு.கா கட்சியும் தலைவரும் நினைத்திருப்பது ஒரு முட்டால் தமான பகல் கனவு என்றுதான் சொல்லலாம்.

நான் இந்த இடத்தில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டிய நிலைமை எனக்குள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி தேர்தலின்போது அவர் சொன்னார் இன்றும் நானே ஜனாதிபதி நாளையும் நானே ஜனாதிபதி மக்கள் என்னுடன்தான் உள்ளனர் நான் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை என்று சொன்னதை யாவரும் அறிந்திருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன்.

இங்கு நான் எதைச் சொல்ல வருகின்றேன் என்றால் மக்களின் மனதை ஒரு முறை அல்லது இரு முறை ஏமாற்றும் நோக்கில் கதைகள் சொல்லலாம் அந்தக் கதைகளை மாற்றி மாற்றி ஏமாற்றும் நோக்கில் தொடர்ந்தும் சொல்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். அவ்வாறு செயற்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அலாஉல்லா போன்றவர்களுக்கு பொதுமக்கள் நல்ல பாடத்தை கடந்த தேர்தலின்போது புகட்டிக் காட்டியுள்ளனர்.

மு.காவின் கட்சிக்கு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட சிலரினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கும் நடந்த அதே நிலைமை வரும் ஆபாயம் எதிர்காலத்தில் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனை இல்லாமல் செய்வது அமைச்சர் றஊப் ஹக்கீமின் முடிவில்தான் உள்ளது. கட்சியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதா? அல்லது கட்சியை தொடர்ந்தும் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதா? என்ற ஒருமுடிவை எடுக்கும் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டு ஆளாகியுள்ளார்.

மு.காவின் தலைவர் ஒரு சானாக்கியமுள்ளவரும், முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த அஷ்ரப்புக்கு அடுத்து கிடைத்த நல்லதோர் பொக்கிஷம் என்றும் மக்கள் மத்தியில் மிகப் பரவலாக பேசப்பட்டுவரும் தலைவராகும் அவர் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குகளை செவ்வனே நிறைவு செய்து கட்சியை தொடர்ந்தும் கொண்டு செல்வார் என அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடக்கின்றாரா? அல்லது எதிர்பார்த்தபடி நடக்கின்றாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இது மக்களுக்கான கட்சியா? அல்லது கட்சிக்காக மக்களா? என்ற முடிவுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப் போகின்றது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

கிழக்கு ஊரான் – கியாஸ் யோசி -

Post a Comment

0 Comments