Subscribe Us

header ads

கற்பிட்டியின் குரல் 'நான்' பகுதியில் இளம் கவிஞர் ரஹ்மதுல்லாஹ் முஹம்மது நுஸ்ரி - நேர்காணல்.


அண்மைக்காலமாக இந்திய மற்றும் இலங்கை பத்திரிகை, வாணொலி, இணையதளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான எழுத்தாளரை. கற்பிட்டியின் குரல் நான் பகுதியின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில் இலங்கை புத்தளத்தை சேர்ந்த இளம் ஆண் கவிஞரும் 'உறவு' கவிதை ஆசிரியருமான ரஹ்மதுல்லாஹ் முஹம்மது நுஸ்ரி

கேள்வி : உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள் ?



( பெயர் , ஊர் , படிப்பு , வேலை )

பதில்  : என் முழுப்பெயர் ரஹ்மதுல்லாஹ் முஹம்மது நுஸ்ரி (முக நூலில் பலருக்கும் அறிமுகமான நுஸ்ரி இப்னு ரஹ்மதுல்லாஹ்).

நான் பிறந்த வளர்ந்த இடமெல்லாமே புத்தளம் தான், ஆனாலும் என் குடும்பம் மன்னார், சிலாவத்துறை, பண்டாரவெளி எனும் ஊரைச் சேர்ந்தவர்கள்.

சாதாரண தரம் வரை புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் பயின்றேன், உயர் கல்வியை சிலாபம், மாதம்பை அல் மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் கற்றிருக்கிறேன்மேலதிகமாக கணனி அறிவையும் சில தனியார் கல்வியகங்களில் பயின்றிருக்கிறேன்.

தற்போது கணனி வடிவமைப்பாளனாக கொழும்பின் ஓர் ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்

கேள்வி : கவிதை  எழுதும் ஆர்வம் எப்போது தோன்றியது?

பதில் : நான் உயர் தர கல்வி பயில்கின்ற வேளையில் தான் கவிதை எனும் அங்கத்துக்குள் உறுப்பினரானேன், ஓய்வு நேரங்களில் கவிதை புத்தகங்களை வாசிப்பேன், கவிதை வீடியோக்கள் பார்ப்பேன் அதுவே ஆர்வத்தையும் வளர்த்துவிட்டது.

கேள்வி : உங்களை கவிதை எழுத தூண்டிய ஒரு காரணி ?

பதில் : ஆரம்பம் முதல் தமிழ் மீதுள்ள பற்றும் பின்னரான காலப்பகுதியில் கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதை வீடியோக்களில் கவிதை வாசிக்கின்ற, உணர்வுகளை மிஞ்சுகின்ற அவரது வடிவும் என்னை கவிதை எழுதத் தோன்றியது எனலாம்

கேள்வி : நீங்கள் எழுதிய முதல் கவிதை ஞாபகம் இருக்கா?

பதில் :  முதல் கவிதை என்றால் விளையாட்டாய் எழுதிய ஓர் கவிதை தான்
 -------------------------------------------------------------
ஒரு கையில் கன் (துப்பாக்கி)
மறு கையில் காதலா
போ..
இதில் எதை தேர்ந்தாலும்
சாவு உனக்குத்தான்
 ---------------------------------------------------

கேள்வி : உங்கள் கவிதையை படித்து முதலில் நல்ல இருக்கு என்று பாராட்டியது யார் ?

பதில் : என் சக மாணவர்கள் தான் என் கவிதையின் முதல் இரசிகர்கள்.

கேள்வி :  உங்களுக்கு எப்டியான கவிதைகள் எழுத பிடிக்கும்?

பதில் : சமூக சிந்தனைக் கவிதைகளில் ஆர்வம் இருக்கிறது, மேலதிகமாக காதல், பழைய ஞாபகங்கள், என் கண் காணும் காட்சிகள் என்பவற்றை கவிதையாக்குவதில் ஆர்வம் அதிகம்.

கேள்வி : நீங்கள் எழுதிய கவிதை வரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கவிதை ஏதாவது (நேயர்களுக்காக)?

பதில் : என் கவிதைகள் எல்லாமே என்னை வெகுவாகக் கவர்ந்த பின்னர் தான் முக நூலில் பதிவேற்றப்படுகிறது, இருந்தும் நேயர்களுக்காக..

--------------------------------------------------------------------
அப்பாக்கள் எங்கள் ஹீரோக்கள்
அவர்கள் பாத்திரமேற்று
நடிப்பவர்கள் அல்லர்
பாத்திரங்களாகவே வாழ்ந்து
எங்களையும் வாழ வைப்பவர்கள்.
-------------------------------------------------------------------------

கேள்வி : நீங்கள் தொடர்ந்து கவிதை எழுத காரணமாக இருப்பது என்ன அல்லது யார் ?

பதில் : என் முகநூல் நண்பர்களும், என் எழுத்தை அதிகம் இரசிக்கும் என் தோழர்களும் தான் என் கவிதை வளர்ச்சிக்கு தூண்டுதலாக இருப்பவர்கள், சில பொழுது என் ஆக்கங்களை முக நூலில் காணாது ஏன் எழுதவில்லை என கேட்டு எழுதத் தூண்டுகின்ற தோழமைகளும் இருக்கிறார்கள்.

கேள்வி : உங்கள் கவிதைகளுக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அல்லதுபரிசு?



பதில் : என்கவிதைகளை மூத்தகவிஞர்கள் அவர்களாகவே முன்வந்து அவர்களின் சஞ்சிகைகளில் பிரசுரித்து என்னை கௌரவப்படுத்தி இருக்கிறார்கள், குறிப்பாக சொல்லப் போனால், கற்பிட்டியின் குரல், புத்தளம்டைம்ஸ், அருவிசஞ்சிகை, விழிஇதழ் போன்றவற்றை சிறப்பித்துக் கூறலாம்.. பரிசுகள் என்பதை விட இதுபோன்ற கௌரவமே எனக்கு பெரும் பாராட்டுதலாகும்


கேள்வி : எழுதுவதற்கெனக் குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ?


பதில் : எழுதுவதற்கென்று நேரம் ஒதுக்கவில்லை சிந்தனை வருகின்ற நேரம் என் தொலைபேசியில் முகநூல் சென்று கவிதைகளை தட்டச்சு செய்து பிரசுரித்து விடுவேன், அதிகமான கவிதைகள் என் கண் முன் நடக்கின்ற காட்சிகளை உடனடியா கவிதையாக்கிய அனுபவமே அதிகம்.

கேள்வி :  கவிதைப் பயணத்தில் உங்களைப் பாதித்த கவிஞர்கள் (தமிழில்) யார்? ஆதர்சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Poets ?


பதில் : என் கவிதையின் பிதாவே வைரமுத்து அவர்கள்தான், அவரைப் போலவே கவிதை எழுதி அவரின் பானியிலேயே மனதைத் தொடும் வண்ணம் வாசிக்க வேண்டுமென்னும் அலாதி ஆசை எனக்கு.

கேள்வி :  சமகாலக் கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள்?


பதில் : முக நூலில் என்னைக் கவர்ந்த கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள்
* கவிஞர் ராபி
* கலாபூஷம் ரபீக்
* கவிதாயினி சில்மியா
* கலைமகள் ஹிதாயதா ரிஸ்வி
* ஹைக்கூ தா. துளசி
* கவிஞர் சீனிவாசன்
இன்னும் பலர் இருக்கிறார்கள்

கேள்வி :  'கவிதைக்கான கருவை முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; கவிதை தானாகவே உருவாகிறது அல்லது நேர்கிறது ' இதற்கு அர்த்தம் என்ன ? கவிதை ஆக்கத்தில் பிர்க்ஞை பூர்வமான உழைப்பு தேவையில்லை என்பதா ?


பதில் : கவிதையின் கரு என்பது என்னைப்பொறுத்தவரை தானாகத் தான் தேன்றுகிறது, கருவை யோசித்து கவிதை யார்க்கும் அளவு யாரும் பொறுமைசாலிகளும் இல்லை, எண்ணத்தில் எப்படி கவிதை தோன்றுகின்றதோ அது போலவே கருவும் தோன்றுகின்றது, ஆனாலும் கவிதைகள் சமூக மட்டத்தை சென்றடைகையில் வாசிக்க சுவாரஷ்யமாகவும் இருக்கவேண்டும் கருத்தை சரியாகவும் சொல்ல வேண்டும் எனும் மேலான எண்ணத்திற்காக மூளை வரை சலவை செய்யப்பட்டு ஆக்கபூர்வமான கவிதைகள் கருத்தரிக்கின்றன.

கேள்வி :  குறிப்பாகச் சொல்லுங்கள். கவிதை எழுதுவதற்கு முன்னால் மனசில் விஷயமே இருக்காதா?


பதில் : வாயில் வருகின்ற வார்த்தைகள் தானாக முளைத்து வருவதில்லையே, எங்கோ கேட்ட, பார்த்த, உணர்ந்த விடயங்கள் தானே வார்த்தைகளில் பிரதிபலிக்கின்றன, அது போலத் தான் கவிதைகளும் மனதில் எங்கோ ஓர் மூலையில் இருந்தே கடைந்தெடுக்கப்படுகின்றன.

கேள்வி : உங்களுக்கு சினிமாவில் பாடல் எழுதும் சந்தர்பம் வந்தால் எழுதுவீர்களா?


பதில் : நிச்சியமாக அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக எழுதுவேன், சில பொழுது சீக்கிரமே அவ்வாய்ப்பு என்னைத் தேடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேள்வி : உங்கள் கவிதை கொண்டு நீங்கள் மாற்ற அல்லது சாதிக்க விரும்புவது ?

பதில் : சமூகத்திற்கு மத்தியில் நடக்கின்ற அன்றாட விடயங்களையே அதிமாக கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன், கவிதையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு என் எழுத்துக்கள் போய் சேர வேண்டும் அதை பார்த்து அவர்கள் தன் தவறை உணர வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறது, என் எழுத்து தன்னைத் தான் சொல்கிறது என்பதை உணர்ந்து ஒருவராவது தன் தவறை உணர்ந்து திருந்தவிட்டால் அது எனக்கு வெற்றி தான்.

கேள்வி : மரபு, புதுக்கவிதைகளைத் தாண்டி பின் நவீனக் கவிதைகள் இப்பொழுது எழுதப்படுகின்றன. அவை பற்றிய உங்கள் புரிதல் எப்படி?

பதில் : ஆரம்ப காலத்து தமிழ் புலமையை விட தற்காலத்து தமிழ் புலமை வெகுவாக குறைந்தே காணப்படுகிறது, ஆசியர்களாயினும், மாணவர்களாயினும் இன் நிலையே தொடர்கிறது, கடினமான தமிழ் சொற்களுக்கு அகராதி தேடிப் போகின்ற நிலை தான், வேகமாக வளர்ந்து வரும் கால மாற்றத்திற்கேற்ப தங்களையும் மாற்றிக்கொண்டு போகிறார்கள் மனிதர்கள். மேலும் மரபுக் கவிதைகளை வாசிக்க ஆட்களும் குறைவு என்பது என் கருத்து

கேள்வி : வாழ்கையின் இலக்கு என்ன?

பதில் : தரப்பட்டிருக்கும் ஒரே ஒரு வாழ்வு மீண்டும் தரப்படக்கூடாதா என ஏங்கத அளவு வாழ்ந்து விடுவது தான் இலக்கு

கேள்வி : இத்துறையில் சாதிக்கவிரும்பும் இளம் வயதினருக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்?

பதில் : ஆரம்ப படிகள் எப்போதும் கடுமையானதாகவே இருக்கும் அதைக் கண்டு உங்கள் கலைத் துறையை தள்ளி வைத்துவிடாதீர்கள், கஷ்டத்திற்கு மத்தியில் தான் இலகு இருக்கிறது, தொடங்கிய துறையில் உங்கள் பெயரும் வாசிக்கப்படும் வரை அவமானங்களையும் தொல்விகளையும் தாங்கி முன்னெறுங்கள்

கேள்வி : உங்கள் அடைவுகளுக்கு குடும்பத்தினர் எவ்வாறு  ஊக்கம்அளித்தனர்.

பதில் : என் தந்தை வாய் திறந்து பாராட்டாவிடினும் என் எழுத்துக்களை அவர் வாசிக்கும் போது அவரின் முகத்தில் தெரிகின்ற பிரகாசம் என் வாழ்வில் மறக்க முடியாது, வீட்டில் உள்ள அனைவரும் என் வளர்ச்சியை பாராட்டாமல் இருந்ததில்லை

கேள்வி :  இளம் வயதில் சிலஅடைவுகளை தொட்டுவிட்டீர்கள். இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா

பதில் : திறமை மட்டுமல்ல, தன்னலம் பாராது சிலர் தருகின்ற ஊக்கமும் தான் என் வளர்ச்சிக்கு ஏதுவாயிருக்கின்றன. (அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

கேள்வி : இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள், வாசகர்கள் வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

பதில் : தமிழ் சினிமா ஆதிக்கமே தமிழை பொறுத்த வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறது இதனாலென்னவோ உலகளாவிய ரசிகர்களுக்கு தென்னிந்திய எழுத்தாளர்கள் மீது ஓர் ரசனை,

இருந்தும் உலகையே தன் கைக்குள் கொண்டு வந்திருக்கும் முகநூல் இதிலொரு பாரிய மாறுதலை சீக்கிரமே செய்யும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

நன்றி 
குறிப்பு : நேர்காணலின் தொகுப்பு கற்பிட்டியின் குரல் நிருபர் (முஜ)

Post a Comment

0 Comments