ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேற்று (06) ஹெம்மாதகம நகரில் ஏற்பாடு செய்திருந்த இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அத்துமீறி உள்நுழைந்து குழப்பங்களை விளைவித்ததாக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளையின் ஏற்ப்பாட்டில் ஹெம்மாதகம க்ரீன் வீச் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கலந்து கொண்டு மாற்று மத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
குறித்த நிகழ்ச்சியை நடத்த விடாது தடுப்பதற்கு முனைந்த பொது பல சேனாவின் உறுப்பினர்கள் அராஜகமான முறையில் அரங்கினுல் நுழைந்து நிகழ்ச்சியை நடத்த விடாது அராஜகத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதனைதொடர்ந்து குறித்த நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் பொது பல சேனாவினர் அத்துமீறி நுழைந்தமை குறித்து ஹெம்மாதகம போலிஸ் நிலையத்தில புகார் செய்வதற்கு சென்ற போது பிக்குகளுக்கு எதிராக புகார் அளித்தால் ஹெம்மாதகம பகுதியை தீ வைத்து எறிப்போம் என பொது பல சேனாவின் பிக்குகள் கூறுவதால் உங்கள் புகாரை பதிவு செய்ய முடியாது என்றும் சமாதானமாகி விடுங்கள் என்றும் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புகாரை பதிவு செய்ய மறுத்து விட்டதாக ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் தெரிவித்தார்.
இதன் காரணமாக பொலிஸாரின் பக்கச் சார்பான செயல்பாடு குறித்தும், பொது பல சேனாவின் அராஜகத்திற்கு எதிராகவும் இன்றைய தினம் (07) கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகம் சார்பாக முறைபாடு செய்யப்பட்டது.
இதன் போது ஜமாத்தின் துணை செயலாளர்களான சகோ. ரீஸா யூசுப், சகோ. ரஜாப்தீன், சகோ. முயினுத்தீன் மற்றும் சகோ. ரஸ்மின் ஆகியோரும், சட்டத்தரணிகள் சார்பில் RRT சட்டத்தரணிகள் அமைப்பின் உறுப்பினர் ருஷ்தி ஹபீப் கலந்துகொண்டார்.
0 Comments