Subscribe Us

header ads

பாட வேளையில் கழிவறைக்குச் செல்ல மாணவர்களிடம் மருத்துவர் கடிதம் கேட்கும் பள்ளி நிர்வாகம்



பிரிட்டனில் இருக்கும் வேல்ஸ் நாட்டில் இயங்கிவரும் ஒரு பள்ளி நிர்வாகம், தமது மாணவர்களின் பெற்றோர்களுக்கு மொபைலில், 'பாட வேளையில் உங்களது பிள்ளையை கழிவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமானால் அதற்கு மருத்துவர் மூலம் கடிதம் பெற்று வரவேண்டும்’ என மெசேஜ் அனுப்பியுள்ளது.

இதனை பதினோராம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் பிரத்யேகமாக அனுப்பியுள்ளனர். இதுமட்டுமின்றி அதுபோல கடிதம் கொண்டுவரும் பிள்ளைகளுக்கு ‘பாஸ்’ ஒன்று வழங்கப்படும். அதை வைத்து அவர்கள் பாடம் நடக்கும்போது கழிவறைக்கு செல்லலாம் என்றும் கூறியுள்ளனர்.

இது, அந்த பெற்றோர்களுக்கு ஆச்சர்யத்தையும், கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 15 வயதுள்ள பிள்ளைகள் அவசரத்துக்கு கழிப்பிடம் செல்லக்கூட மருத்துவரிடம் அனுமதிக் கடிதம் பெற வேண்டும் என்கிற பள்ளி நிர்வாகத்தின் கொள்கை சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என அவர்கள் கருதுகின்றனர்.

பெற்றோரின் கோபத்திற்கு ஆளான பள்ளியின் தலைமை ஆசிரியர் இதற்கு பதிலளித்தபோது தங்களது நோக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றார். மேலும், அந்த மாணவர்களுக்கு ஏதேனும் உடலில் பிரச்சனை இருந்து அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டி இருந்தால் அதனை நாங்கள் கருத்தில் கொள்ள இந்த முறை வசதியாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

முத்து படத்தில் வரும் ரஜினி சொல்வதுபோல, ‘தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தூக்கம் மற்றும் பல விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. வரும்போது போக வேண்டியதுதான்!' இதற்கெல்லாம் நல்ல நேரமா பார்க்க முடியும்?

Post a Comment

0 Comments