சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக, ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புகுவதற்காக, லட்சக்கணக்கான அகதிகள் கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்த பாதுகாப்பற்ற பயணத்தினால் ஐரோப்பிய நாடுகளுக்குள் வாழ வழி கிடைக்குமா? என அறிவதற்கு முன்னே பலர் மடிந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய அவலங்களுக்கு ஆளான சிரியா நாட்டுச் சிறுவன் சொல்லியிருக்கும் வார்த்தை பிரிட்டனின் தலையீடு தொடர்பான முடிவை மாற்ற வேண்டிய வகையில் அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளிலிருந்து நுழையும், அகதிகளால் ஐரோப்பிய நாடுகளுக்கு சமீப காலமாக பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. அங்கே, அகதிகள் நுழைவதை தடுத்த வேளையில், ஐரோப்பிய மக்கள் அகதிகளை ஆதரிக்க முடிவெடுத்து அவர்களை சமீபத்தில் வரவேற்கத் தொடங்கினர்.
இதனிடையே 13 வயது இந்தச் சிறுவனின் கருத்து உலக ஊடகங்கள் மற்றும் அரசுகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. ‘எங்கள் நாட்டை விட்டு, ஐரோப்பாவில் குடியேற நாங்கள் ஆசைப்படவில்லை. போரை நிறுத்துங்கள்! அதுதான் எங்கள் நாட்டிலிருந்து எங்களை வாழ முடியாமல் துரத்தி அடிக்கிறது’ என்று அவன் கூறியுள்ளான்.
கடந்த 2013-ம் ஆண்டு நாடளுமன்றத்தில் சிரியாவின் இந்தப் பிரச்சனையை தடுக்க அந்நாட்டுக்குள் ராணுவப் படைகளை அனுப்புவதுபற்றி, கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த கருத்து பெரும்பாலானோரால் ஆதரிக்கப்படவில்லை. ஏற்கனவே, லிபியா மற்றும் ஈராக்கில் ராணுவப் படைகளை அனுப்பியபோது, அது அங்கிருக்கும் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு காண கைகொடுக்கவில்லை.
எனவே, சிரியாவிலும் இந்த நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பயத்தில் ராணுவப் படை அனுப்பப் பலரும் ஆதரவு கொடுக்கவில்லை. இப்போதாவது உலகம் இந்தச் சிறுவனின் கதறலுக்கு பதிலளிக்க வேண்டும். எத்தனை தூரம் ஓடுவது? எங்கே போய் வாழ்வது? என உள்நாட்டுப் போரை விட பெரிய போர் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நடப்பதை உணர்ந்து போரை கைவிட்டால்தான் நல்லது!
0 Comments