உலக நாடுகளின் மனசாட்சியை உலுக்கி, ஒரு புகைப்படத்தின் அசாதாரணமான வலிமையை பறைசாற்றிய இந்தப் புகைப்படமே நம்மை செயலற்றுப் போகச் செய்கிறது என்றால், இந்தப் புகைப்படத்தை எடுத்த, துருக்கியைச் சேர்ந்த டோகன் செய்தி நிறுவனத்தில் புகைப்பட-நிருபராக பணியாற்றும் நிலுபர் டெமிர் என்ற பெண்ணின் உணர்வுகளை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது.
சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இந்த ஆண்டில் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புக கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 23 பேர், கடந்த புதன் அன்று, துருக்கியிலிருந்து கிரீஸ் செல்ல இரு படகுகளில் சென்றனர். அதில் படகு கவிழ்ந்து 12 பேர் நடுக்கடலில் மூழ்கி மூச்சுத்திணறி, துடிதுடித்து பலியாகினர். 9 பேர் மட்டுமே பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆன ஐலன். அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர். முன்னரே இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்திருந்தும் கூட தன் நாட்டிற்கு அகதிகளை அழைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பிடியை இறுக்கியபடியே இருக்கிறார்கள் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள்.
இந்த நிலையில், நிலுபர் டெமிரின் இந்த புகைப்படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்கத் துவங்கியுள்ளது. இந்த கொடூர சம்பவம் நடந்த துருக்கியின் போட்ரம் மாவட்டம், கடல் கடந்து வரும் அகதிகளின் சந்திப்பு புள்ளியாக உள்ளது. இங்குள்ள அகியர்லார் கடற்கரையில், கடந்த புதன்கிழமை காலை 6 மனியளவில் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் டெமிர்.
இந்த அனுபவம் குறித்து அவரளித்துள்ள பேட்டியில் “3 வயது குழந்தையான ஐலன் குர்தியை பார்த்த நொடி நான் அப்படியே உறைந்து போய்விட்டேன். அய்லான் குர்தியின் முகம் கடற்கரை மணலில் புதைந்திருந்தது. அப்போது என்னால் முடிந்த ஒரே விஷயம், அவனது அலறல் சத்தம், இந்த உலகின் காதில் கேட்கும்படி செய்வது ஒன்றுதான். அதுதான் ஒரு நிருபராக என்னால் முடிந்தது.
ஐலனின் சகோதரனான காலிப், அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் கிடந்தான். அங்கு இருந்த யாருமே ஆபத்து கால ஜாக்கெட் (மிதவை சட்டை) அணிந்திருக்கவில்லை. இது எவ்வளவு கொடூரமானது என்பதை இந்த புகைப்படம் உலகிற்கு உணர்த்தும். இது துருக்கியின் எல்லையைக் கடந்த ஒரு சர்வதேச பிரச்சனை.” என்றார்.
0 Comments