எழுத்தறிவு உள்ள நாடே சமூக, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடையும். இதை மனதில் கொண்டுதான் பல நாடுகள் மக்களுக்கு அடிப்படை கல்வியை கட்டாயம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. எழுத்தறிவு தினமான இன்று இதை மனதில்கொண்டு அறிவாயுதம் ஏந்தி ஆற்றல்மிகு சமுதாயம் படைப்போம் என உறுதி ஏற்போம்.
ஐநா அமைப்பின் அங்கமாகிய ஐநா கல்வி அறிவியல் கலாச்சார நிறுவனம்(யுனெஸ்கோ) எழுத்தறிவின்மையை அகற்றும் நோக்கோடு 1965, செப்டம்பர் 8ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உலக நாடுகளை சேர்ந்த கல்வி அமைச்சர்களின் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில்தான் எழுத்தறிவின் அவசியம் தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இதன் பரிந்துரைகளின்படி யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழுக்கூட்டம் 1965 நவ.17ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் 1966 முதல் செப்.8ம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்படுவது என முடிவு செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர வைப்பதே இதன் நோக்கம்.
உலகில் சுமார் 78 கோடி பேர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பேர் பெண்கள். எழுத்தறிவின்மைக்கும், நாடுகளின் வறுமைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எந்த மொழியிலும் வார்த்தைகளை எழுதவும், படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மை என்று ஐநா வரையறுத்துள்ளது. நம் நாட்டை பொறுத்தளவில் வேலை, பொருளாதாரம் போன்றவற்றிற்கு கல்வியே பிரதானமாக உள்ளது. கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு முன்புவரை பரம்பரைச் சொத்து இதனை தீர்மானித்து வந்தது.
உலகின் பலதரப்பட்ட விபரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில் எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. நாட்டு நடப்புகள், தனக்கு, தன்குடும்பத்திற்கான விபரங்கள் போன்றவற்றிற்கு கூட பிறரை நம்பியே காலம் தள்ள வேண்டியுள்ளது.
கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவின் மூலமே ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்திற்கு இது அவசியம். எழுத்தறிவே ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலையைத் தீர்மானிக்கிறது. குழந்தைகளின் வளர்ப்பு, கல்வி மற்றும் எதிர்காலத்தையையும் கூட அதுவே நிர்மாணிக்கிறது.
EDITED BY AHAMED DEEDAT
0 Comments