இங்கிலாந்தின் டாண்ட்டன் நகரில் தற்போது வசித்து வரும் ராய் பிளாக்மோர்(83) என்பவர் தனது ஏழு வயதில் அனாதையாகிப் போனார். தனது உறவினர்கள் யார்? குடும்பம் எங்கே? என்கிற தேடல் இந்த காரணத்தாலேயே ஏற்பட்டதாக அவர் தெரிவிக்கிறார்.
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாத் நகரில் ராய் பிறந்தார். இவர் தனது பத்தாயிரத்துக்கும் மேலான மூதாதையரை கண்டறிந்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். இவர் இங்கிலாந்து ராணிக்கு 22-வது ஒன்றுவிட்ட உறவினர் எனவும், வெற்றிவீரர் வில்லியம் மற்றும் ஆல்பிரட் ஆகியோரின் பரம்பரை எனவும் அவர் தெரிவித்தார்.
நமது தாத்தா, பாட்டன், பூட்டன் என நீளும் மரபுவழியை கணக்கிடும் ‘பேமிலி ட்ரீ’-ல் இவரது குடும்பம் கி.பி. 500-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செர்டிக் குடும்பமாக இருந்து, பின்னர் பிரெஞ்சு அரச குடும்பமாகி, பத்தாம் நூற்றாண்டில் அரசாண்ட பிரெஞ்சு ராஜா ஹூக் கேபெட் ஆகியோர் வரை நீள்வதாக அவர் தெரிவித்தார்.
ராய் தனது மனைவி கிக்ரிட்டுடன், நிறைய பயணித்து பல்வேறு இணையத்தின் வருகைக்கு முன்பே, பழைய ஆவணம் மற்றும் காப்புப்பத்திரங்கள் போன்றவற்றை அலசி ஆராய்ந்து இந்த மரபுவழி அட்டவணையை தயார் செய்ததாக தெரிவித்தார்.
இவ்வளவு அதிகமான மூதாதையரை கண்டறிந்த சாதனைக்காக கின்னஸ் இவரை அங்கீகரிக்குமா என ராய் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
உங்களது பாட்டன், பூட்டன் வரையாவது உங்களுக்கு தெரியுமா? இதனை தெரிந்துகொள்ள கொஞ்சம் ஆர்வம் காட்டினாலே உங்கள் குடும்பத்தின் மீது ஒரு பற்று வரும். முயற்சித்துப் பாருங்கள்!
0 Comments