Subscribe Us

header ads

ஆஸ்திரேலியாவில் 40 கிலோ ரோமத்துடன் அவதிப்பட்ட ஆட்டின் சுமை இறக்கிவைக்கப்பட்டது! (PHOTOS)



சுமார் ஐந்து ஆண்டுகளாக ரோமம் வெட்டப்படாத கிறிஸ் என்னும் செம்மறி ஆடு, அதன் உடலில் கனத்த இந்த ரோமத்தாலேயே இறந்து போய்விடலாம் என அஞ்சிய ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவர், விலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்கும் அமைப்பு (RSPCA) ஒன்றுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து உடனடியாக அந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். அதன் ரோமத்தை வெட்டுவதை பார்க்கும் அதிர்ச்சியிலேயே கிறிஸ்ஸின் உயிர் போய்விடுமோ என அவர்கள் பயந்தனர். இதனால் அதற்கு மயக்க மருந்து கொடுத்து ரோமத்தை அகற்ற எண்ணினர். 

இந்தத் துறையில் தேர்ச்சி பெற்ற ஐந்து பேர் அடங்கிய குழு அதற்கு, அதிக காயம் ஏற்படாமல் இருக்கும்படி அடுக்கு அடுக்காக வெட்டி, அதன் ரோமத்தை சுமார் 42 நிமிட உழைப்புக்கு பின்னர், 40.45 கிலோ கிராம் அளவுக்கு உடலில் இருந்து முழுவதுமாக எடுத்தனர்.

மொத்த ரோமமும் வெட்டி எடுக்கப்பட்டபோது ஆட்டின் எடை 44 கிலோவாக குறைந்து போனது. கிறிஸ் தனது உடலின் எடைக்கு சரிநிகரான ரோமத்தை இத்தனை காலமாக சுமந்து கொண்டு உயிருடன் வாழ்ந்துவந்தது பெரும் அதிசயமாக கருதப்படுகிறது.

மயக்கம் தெளிந்த பின்னர் உடலில் ரோமம் இல்லாத்து பற்றி கிறிஸ் ஏமாற்றம் அடைந்ததாக தெரியவில்லை. மாறாக அதற்கு அளிக்கப்பட்ட உணவை உண்டு இந்த அமைப்பினரிடம் செல்லமாக விளையாடியதாம் கிறிஸ். நாற்பத்தி இரண்டு சென்டி மீட்டருக்கு வளர்ந்த இந்த ரோமத்தை வைத்து கம்பளி செய்ய முடியாது என்பதனால், ஏதேனும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படலாம் என கருதப்படுகிறது.

இந்த அமைப்பு கிறிஸ்ஸின் உரிமையாளர் கிடைக்கும் வரை, சுமாராக ஏழு நாட்களுக்கு தமது பாதுகாப்பில் வைத்திருக்க உள்ளது. அப்படி உரிமையாளர் அதைத் தேடி வரவில்லை எனில் அதனை பார்த்துக் கொள்ள விரும்புவோரிடம் அது ஒப்படைக்கப்படும்.

பொதுவாக செம்மறி ஆடுகளின் உடலில் ஒரு ஆண்டுக்கு சுமார் ஐந்து கிலோ வரை இந்த ரோமம் வளரும். இதற்கு முன்னர் நியூசிலாந்தில் ஒரு ஆட்டுக்கு 27 கிலோ எடையில் ரோமம் இருந்து அகற்றப்பட்டதே உலக சாதனையாக இருந்தது.  





Post a Comment

0 Comments