Subscribe Us

கிளைகள் தரிக்கப்பட்ட மரமாக பாராளுமன்றம் செல்லும் முஸ்லிம் காங்கிரஸ் - அஹமட் புர்கான் JP


கோழைகளைப் போல் ஒழிந்து கொள்ளாது நாங்களும் ஒட்டகத்தை இம்முறை தேர்தல் களத்தில்  இறக்கினோம்

ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகம் அரசியல் அநாதையாகி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு  இறுதி நேரத்தில்  நான்  மக்களுக்கு தெளிவூட்டும் வகையில்  அறிக்கை ஒன்றினை (கற்பிட்டிய voice) எனும் இணையத்தினூடாகவும் இன்னும் சில இணைய ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டிருந்தேன் அனைவரும் அச்செய்தியை வாசித்தறிந்திருப்பீர்கள் எனவும்  நம்புகிறேன்.   


இருந்த போதிலும்  இம்முறை நடைபெற்ற தேர்தலின் மூலமாக முகநூலில் இருந்து ஒருபடி மேலெழுந்து  மக்கள் மன்றத்தில்  அடையாளப் படுத்தப்பட்டுள்ளோம். அந்தவகையில் மக்கள் மத்தியில் எமது கட்சியும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் எமது கொள்கைகளை   ஏற்று மக்கள் எமக்கும் எமது கட்சிக்கும் ஆணை வழங்குவார்கள் என்றும் நாம் திடமாக நம்புகின்றோம்.

அதற்கான வேலைத்திட்டங்களை மேலும் விஸ்தரித்து செயற்படவும் தயாராகியுள்ளோம்.


அத்துடன் இம்முறை நடந்து முடிந்த தேர்தலில் எமது நிலைப்பாட்டை மிகச் சுருக்கமாக கூறப்போனால் பலவீனமானவர்களுடன் போட்டியிட்டு வெற்றி கொள்வதைக் காட்டிலும் வீரமானவர்களுடன் போட்டியிட்டு தோற்பது சிறந்தது என்கின்ற அடிப்படையில் இன்று நாம் திருப்தியுடன் இருக்கின்றோம். 

அதற்காக இந்த கருத்தை வைத்து எமது இயலாமையை குறிக்கின்றது என என்னிவிட வேண்டாம் நாங்கள் இயலுமான அளவு முயற்சித்திருக்கின்றோம்.


அந்த வகையில் எமது கட்சியை விடவும் பழம் தின்று கொட்டை போட்ட முன்னால் அமைச்சர்களும் அவர்களின் அரசியல்  கட்சிகளும் பல அரசியல் பிரமுகர்களும் இன்று மக்களினால் நிராகரிக்கப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

ஏன் அம்பாறை மாவட்டத்தில் பல கட்சிகளுக்கு சவால் விடுத்த  மு.கா தலைவர் கூட பத்து  ஆசனங்கள் கைப்பற்றி மேலதிகமாக இரண்டு தேசியப் பட்டியல்  ஆசனங்களுடன் பாராளுமன்றம் செல்வோம் என பகிரங்கமாக கூறியிருந்தார் கடைசியில் என்ன ஆனது?

எதிர்பார்த்ததை விட மாற்றமான முடிவுகளே  வெளிவந்தன ஏனெனில் அன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தோற்கடிக்க  கடந்த ஜனாதிபதி தேர்தலில்  எழுந்த மக்களின் ஜனநாயக புரட்சியானது மீண்டும் அதே மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அதிகாரத்திற்கு வர விடாமல்  விரட்டியடிக்கவே  ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு  பெருமளவிலான வாக்குகளை வழங்கி மக்கள்  இன்று இவர்களை வெற்றிபெறச் செய்துள்ளார்களே தவிர  இதனை  முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டுமொத்த  வெற்றியாக கொள்ள முடியாது.


சில வேளை திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து களம் இறங்கி இருந்தால் ஒரு ஆசனம், அல்லது மிகப் பெரிய சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில்  இரண்டு ஆசனங்களை   கைப்பற்றியிருக்கும் அதுமட்டுமல்ல ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் நாடளாவிய ரீதியில் போட்டியிட்ட  முஸ்லிம் வேட்பாளர்களுள் வன்னி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் காதர் மஸ்தான் அவர்களைத் தவிர வேறு எவரும் பாராளுமன்றத்திற்கு தெரிவாக வில்லை காரணம் எந்த வகையிலும் ஆட்சியை மஹிந்த ராஜபக்ஷ தட்டிப் பறித்து விடக் கூடாது என்பதில் முஸ்லிம்  சமூகம் விழிப்புணர்வுடன் இருந்ததினால் தான்  ஐ.தே.கட்சிக்கும் அம்பாறையில் களம் இறங்கிய முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் முஸ்லிம் சமூகம்  பெருமளவிலான  வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.


இதற்கு பொருத்தமான உதாரணமாக  கல்முனையில் ஐ.தே.க வேட்பாளராக போட்டியிட்ட சட்டத்தரணி ரஸாக் அவர்கள் மக்களின் மத்தியில் செல்வாக்கு குறைந்தவராகவும் , புதுமுகமாக இருந்த போதிலும்  சுமார் 10000 ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்படி அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க முனைந்து இருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.

மேலும் ஐ.தே.கட்சியின் அம்பாறை மாவட்ட  முதன்மை  வேட்பாளராக போட்டியிட்ட திரு  தயாகமகே அவர்கள் கணிசமான (17000+) விருப்பு வாக்குகளை முஸ்லிம்களிடத்தில் இருந்து பெற்றுள்ளார்.


அதே நேரம் திருகோணமலையில் ஐ.தே.க யினூடா போட்டியிட்ட மு.கா வேட்பாளர் எம். எஸ். தௌபீக் அவர்களை விட ஐ.தே.க வேட்பாளர்களான எம்.ஏ.எம். மஹ்ரூப் மற்றும் இம்றான் மஹ்ரூப் போன்றவர்கள்  கூடுதலான விருப்பு வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதன்படி  அங்கு முஸ்லிம் காங்கிரஸிற்கு சரிவேற்பட்டுள்ளது என்பது வெளிப்படுகின்றது.

அதே போன்று மு.கா தலைவர் ஐ.தே.கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற அந்தஸ்து இல்லாமல் கண்டி மாவட்டத்தின் ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் என்ற தோரணையில் ஐ.தே.கட்சியினூடாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

அதேபோன்று மட்டக்களப்பில் அலிசாஹிர் மௌலானா அவர்களின் சொந்த செல்வாக்கின் அடிப்படையில்  மு.கா யின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். என்பதும் அமீர் அலி மற்றும் ஹிஸ்புல்லா போன்றவர்களினால் அவர்கள் போட்டியிட்ட கட்சிகள் மு.கா சவாலாக பெற்றுக் கொண்ட வாக்குகள் தெளிவுபடுத்துகின்றது.

எனவே இத்தேர்தலில் பெறப்பட்ட ஐந்து ஆசனங்களும் முஸ்லிம் காங்கிரஸின் தனிப்பட்ட வாக்குகளினால் தான் பெற்றுக் கொள்ளப் பட்டது என்று அக்கட்சி தம்பட்டமடித்துக் கொள்வது ஏற்புடையதல்ல.  

மாறாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் மீதான வெறுப்பை  இந்த தேர்தல் முடிவுகள் மிகத் துல்லியமாக  கோடிட்டு காட்டியுள்ளது.

எது எவ்வாறான  போதிலும் கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளையும் இம்முறை நடைபெற்ற தேர்தலின் முடிவுகளையும்  ஒப்பிட்டுப் பார்க்கையில்  மு.கா  இம்முறை பெரும் சவால்களுக்கும் போராட்டத்திற்கும் மத்தியில் ஐந்து ஆசனங்களை பெற்றுள்ளது. என்பதும் தேசிய ரீதியில் மு.கா பாரிய பின்னடைவு கண்டுள்ளது என்பதும் புலனாகின்றது.  அதுமட்டுமல்லாமல் இக்கட்சியின் கடந்த கால செயற்பாடுகளுக்கு கிடைத்த தக்க பதிலடியுமாகும்.

  அந்த வகையில் இம்முறை  கிளைகள் தரிக்கப்பட்ட மரமாய் பாராளுமன்றம் செல்கிறது   முஸ்லிம் காங்கிரஸ் இந்தளவேனும் பெருபேறுகளை பெற்று கட்சியின்   மானத்தை காப்பாற்ற அம்பாறை மாவட்ட மக்களினால் வெறுக்கப்பட்ட வேட்பாளர்கள் ஆயினும் தம் சமூகம் அநாதையாகி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வேறுவழியின்றி அதே வேற்பாளர்களுக்கு யானைச் சின்னத்தின் ஊடாக அதிக விருப்பு வாக்குகளை வழங்கி தெரிவு செய்துள்ளார்கள் என்பதே உண்மை ஆகவே எப்படியேனும் கிடைக்கப் பெற்ற மக்கள் அங்கீகாரத்தை மு.கா தலைமையும் இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளும் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு பூரணமாக நிறைவேற்றுவதற்கும் நிலுவையில் உள்ள வாக்குறுதிகளையும், அபிவிருத்தி பணிகளையும், அதிலும் குறிப்பாக அட்டாளைச்சேனைக்கு வழங்குவதாக கூறப்பட்ட  தேசியப்பட்டியல் ஆசனத்தையும் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி அதிகாரத்தையும் முதற்கட்டமாக வழங்குவதோடு மறைந்த பெருந் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் விட்டு சென்ற இடத்தில் இருந்து சமூக விடுதலைக்கான  பயணத்தை கடமையுணர்வுடனும்,நன்றியுணர்வுடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று கட்சி  வேறுபாடுகளுக்கு அப்பால் வினையமாக வேண்டிக் கொள்கின்றேன்.

- அஹமட் புர்க்கான்

Post a Comment

0 Comments