சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரைச் சேர்ந்த ஒரு செல்வந்தர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை சந்திக்க செல்வதாகவும், தன்னுடன் துணைக்கு வருமாறும் அவரது நண்பருக்கு அழைப்பு விடுத்தார்.
பணக்கார நண்பரின் செலவில் உல்லாசபுரியான அமெரிக்காவை ஓசியில் சுற்றிப் பார்க்கலாம் என நினைத்த அந்நபரும் உடனடியாக இதற்கு சம்மதித்தார்.
அமெரிக்காவுக்கு சென்று சேர்ந்தவுடன் 'இவ்வளவு தூரம் வந்து விட்டோம். நாம் இருவரும் ஒரு மெடிக்கல் செக்அப் செய்து கொள்ளலாமே.., என்று அந்த செலவந்தர் நண்பரிடம் யோசனை கூற, 'நண்பன்னா இவன் நண்பேன்டா, நம்ம மேல பயப்புள்ள எம்புட்டு பாசம் வெச்சிருக்குது' என்று மனம் நெகிழ்ந்துப்போன அவரும் இதற்கு சம்மதித்தார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது. முழு சிகிச்சைக்கான செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். இங்கேயே ஆபரேஷன் செய்துகொண்டு உடம்பு தேறியப்பிறகு ஊருக்கு போகலாம் என செல்வந்தர் கூற, 'ராசி, ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி' என்ற பாடலை கேட்டறிந்திருக்கா விட்டாலும், அதற்கேற்ற உவமையை அவர் தனது மனதில், அரபு மொழியில் கற்பனை செய்துகொண்டார். ஒரேநேரத்தில் பலவித உணர்வுகளில் உந்துதலால் நெக்குருகிப் போனார்.
உடனடியாக ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, உடல்நிலை சரியானதும் நண்பர்கள் இருவரும் சவுதி வந்து சேர்ந்தனர். சில நாட்களில் ஆபரேஷன் செய்யப்பட்ட அடிவயிற்றுப் பகுதியில் தீராத வலி ஏற்படவே ஜெட்டா நகரில் உள்ள பிரபல டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்ற அந்நபர், டாக்டர் கூறியதை கேட்டு அதிர்ந்தே போனார்.
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினர்களை பார்ப்பதற்காக என்று கூறி தன்னை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற அந்த பணக்கார நண்பர், அங்கு சிறுநீரக பாதிப்பால் போராடிக் கொண்டிருந்த தன்னுடைய உறவினரின் உயிரை காப்பாற்ற தனக்கு தெரியாமலேயே தனது சிறுநீரகத்தை அபகரித்துவிட்ட தகவலை அறிந்த அவர், உடனடியாக அந்த சிநேகிதத் துரோகியை தேடிச் சென்றார்.
கற்பொழுக்கத்துக்கு இணையான நட்பொழுக்கத்துக்கு களங்கம் விளைவித்த அந்த செல்வந்தரை சரமாரியாக திட்டித் தீர்த்தார். அவர் அளிக்க முன்வந்த இழப்பீட்டு தொகையை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர், இந்த நவீன மோசடி தொடர்பாக ஜெட்டா போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரையடுத்து, இச்சம்பவம் தொடர்பான உரிய ஆவண ஆதாரங்களை சேகரித்த போலீசார், அந்த செல்வந்தர் மீது ஜெட்டா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு தொடர்ந்துள்ளனர்.


0 Comments