மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும். சில கணவர்கள் அலுவலகம், தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாகவும் மது அருந்துவதுண்டு. அப்போது நீங்கள் அவர் பிரச்சினை என்ன என்பதை கேட்டறிந்து ஆறுதல் கூறலாம்.
இதை விட்டு விட்டு அந்த நேரத்தில் உங்கள் பிரச்சினைகளை மட்டும் கூறிக்கொண்டிருந்தால் மோதல்தான் வெடிக்கும். பெரும்பாலும் நண்பர்களால்தான் கணவர் மதுப்பழக்கத்துக்கு அடிமை ஆகிறார். அதனால் அவரது நட்பு வட்டத்தை கண்காணிப்பது அவசியம். நல்லவர் -கெட்டவர் யார் என்பதை அறிந்து கெட்டவர்களுடன் நட்பு வைத்திருப்பதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும். உங்கள் கணவருடன் திறந்த மனதுடன் பழகுங்கள். அவர் திருந்துவதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அணுகுங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் சொல்லிப் பார்த்தும் மனுஷன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லையா, மருத்துவர்களிடம், அழைத்துச் செல்லுங்கள். உங்கள் கணவரின் போதைப் பழக்கத்துக்கான காரணம் அறிந்து, அதை மறப்பதற்கு மனரீதியான பயிற்சி அளிப்பார்கள். இந்த பயிற்சி பெற்றால் எப்பேர்பட்ட குடிகாரரும் திருந்தி விடுவதை காண முடிகிறது. சிலர், போதை ஊசி, போதை பாக்கு, போதை மாத்திரை, கஞ்சாஸ போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே மாறி விடுகிறார்கள்.
இவர்களை மனரீதியான பயிற்சியாலும், முறையான மருத்துவ சிகிச்சை மூலமும் குணப்படுத்த முடியும். சமீபத்தில் போதைக்கு அடிமையாகி வரும் ஆண்களின் எண்ணிக்கை பெருகி இருக்கிறது. இதற்கு காரணம் திருமணம், பிறந்தநாள், விழா, பண்டிகை கொண்டாட்டம்... என்று பல்வேறு விசேஷ நிகழ்ச்சிகளிலும் மதுபானம் அருந்துவது ஒரு ஃபேஷனாக மாறி இருப்பதுதான். இந்த நிலை மாறினால் குடிகாரர்கள் பெருகுவது குறைய வாயப்புள்ளது.


0 Comments