பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது எனவும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் எனவும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தினசரி பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குமார் வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என என்னிடம் கூறியுள்ளனர்.
அதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற தேர்தலின் போது காணப்பட்ட மகிந்த ராஜபக்ச நடத்தை, தற்போது நேர் எதிராக மாறியிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்து வந்த மகிந்த தற்போது அவரை புகழ்ந்து வருகிறார்.
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை தடுத்து நிறுத்தி கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தன்வசப்படுத்தும் தந்திரமான முனைப்புகளை மகிந்த மேற்கொண்டு வருவதாகவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments