Subscribe Us

அக்பர் காலத்தில் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் பொக்கிஷ குரான்: கடத்தல் கும்பலிடமிருந்து பறிமுதல்...



நண்பர்கள் பரிசாகக் கொடுத்த சின்ன கீசெயின் காணாமல் போனால் கூட மனம் எப்படி பதறும்? சின்ன பொருட்களுக்கே இப்படி என்றால், 400 வருடம் பழமையான குரான் தொலைந்து போனால் எப்படி இருக்கும்? 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலிருந்து 160 கி.மீ தொலைவிலுள்ள பியவார் நகரைச் சேர்ந்த, ஜெய்தேவ் பிரசாத்துக்கு(55) 2011-ம் ஆண்டு அவரது நண்பர், தனது பரிசுத்தமான நட்பின் அடையாளமாக 400 வருடம் பழமையான குரானை பரிசாகக் கொடுத்திருந்தார். மத உணர்வுகளைக் கடந்து அந்த குரானை உயிராய் நேசித்த ஜெய்தேவ் அதை ஒரு பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தார். 

தனக்கு நெருக்கமான சிலரிடம் மட்டும், தங்கத்தால் பொறிக்கப்பட்ட குரானின் வாசகங்களையும், புத்தகத்தில் பதிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பற்ற நீலக் கற்களையும் கண்கள் மின்ன, அந்த அரிய குரான் புத்தகத்தினைப் புரட்டிக் காட்டுவார்.  

இந்நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை ஜெய்தேவின் வீட்டிற்கு, அவருடன் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர், தனது நண்பருடன் வந்து, அந்த குரான் புத்தகத்தை கேட்டுள்ளார். தெரிந்தவர் என்பதால் புத்தகத்தைக் கொடுத்த ஜெயதெவ், பத்திரமாக பார்க்கும் படி கூறிவிட்டு, போனில் பேசிக் கொண்டு இருந்தார். திடீரென ஜெய்தேவை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அந்த இருவரும் குரான் புத்தகத்தை பைக்கில் திருடிக் கொண்டு ஓடிவிட்டனர். 

தனது நட்பின் அடையாளமாக இருந்த, மகளுக்கு கொடுப்பதற்காக பொக்கிஷமாக பாதுகாத்து வைத்த, அந்த அரிய புத்தகம் காணாமல் போனதால் ஊணுறக்கமின்றி தவித்து வரும் ஜெயதேவ், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகாரும் அளித்தார். இதையடுத்து குற்றவாளிகளை ஜெய்பூர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், கடந்த திங்கள் அன்று தங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் பெங்களூரு கே.ஆர் நகர் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட மைசூர் போலீசார் 4 பேர் கொண்ட கடத்தல் கும்பலைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பழமையான குரானையும், அதை 5 கோடி ரூபாய்க்கு விற்க இருந்ததையும் கண்டுபிடித்தனர். பின்னர் அவரகள் கூறிய விவரங்களை வைத்து அந்த கும்பலைச் சேர்ந்த மேலும் 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட குரான் குறித்து, 93 வயதான வரலாற்று ஆய்வாளர் ஷேக் அலி, தன் வாழ்நாளில் இது போன்ற ஒரு குரானை பார்த்ததில்லை என்றும், குரானின் கடைசி பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய வருடத்தின் படி, அது அக்பர் காலத்தில் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை செய்வதற்கு 6 முதல் 7 வருடங்கள் வரை ஆகியிருக்கவேண்டுமென்றும் கூறியுள்ளார். மேலும், நிச்சயம் இதுவே இந்தியாவின் மிகவும் பழமையான குரானாக இருக்க வேண்டும் என்றும் அவர் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளார்.




Post a Comment

0 Comments